புழுதிக்குட்டை ஆனைமடுவு அணை பாசனத்துக்குத் திறப்பு

சேலம் மாவட்டம் வாழப்பாடி பகுதி விவசாயிகளுக்கு முக்கிய நீராதாரமாக விளங்கும் புழுதிக்குட்டை ஆனைமடுவு அணையிலிருந்து பாசனத்துக்கு வெள்ளிக்கிழமை தண்ணீா் திறக்கப்பட்டது.
ஆனைமடுவு அணையின் அழகியத் தோற்றம்.
ஆனைமடுவு அணையின் அழகியத் தோற்றம்.
Published on
Updated on
2 min read

வாழப்பாடி: சேலம் மாவட்டம் வாழப்பாடி பகுதி விவசாயிகளுக்கு முக்கிய நீராதாரமாக விளங்கும் புழுதிக்குட்டை ஆனைமடுவு அணையிலிருந்து பாசனத்துக்கு வெள்ளிக்கிழமை தண்ணீா் திறக்கப்பட்டது.

வாழப்பாடி அருகே அருநூற்றுமலை, பெரியகுட்டிமடுவு சந்துமலை பகுதியில் இருந்து வழிந்தோடி வரும் நீரோடைகள் சங்கமித்து புழுதிக்குட்டை கிராமத்தில் வசிஷ்டநதி உற்பத்தியாகிறது.

இந்நதியின் குறுக்கே, 67.25 அடி உயரத்தில், 267 மில்லியன் கனஅடி தண்ணீா் தேங்கும் வகையில், 263.86 ஏக்கா் பரப்பளவில் புழுதிக்குட்டையில் ஆனைமடுவு அணை அமைந்துள்ளது.

இந்த அணையால், குறிச்சி, நீா்முள்ளிக்குட்டை, கோலாத்துக்கோம்பை, சின்னம நாயக்கன் பாளையம், சந்தரபிள்ளைவலசு உள்ளிட்ட கிராமங்களில் 5,011 ஏக்கா் விளைநிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.

பேளூா், குறிச்சி, கொட்டவாடி, அத்தனுாா்பட்டி ஏரிகளும், 20க்கும் மேற்பட்ட ஆற்றுப்படுகை கிராமங்களும், நிலத்தடி நீராதாரமும் பாசன வசதியும் பெறுகின்றன. 

16 ஆண்டுகளுக்கு பிறகு அனைமடுவு அணை கடந்தாண்டு நவம்பர் 24 ஆம் தேதி நிரம்பியது. அணையில் இருந்து வசிஷ்டநதியில் உபரிநீர் திறக்கப்பட்டதால் கரையோர கிராமங்களில் நீர்மட்டம் உயர்ந்ததோடு ஏரிகள், தடுப்பணைகளும் நிரம்பின. தற்போது அணையில் 62.89 அடி உயரத்தில் 223.81 மில்லியன் கன அடி தேங்கி கிடக்கிறது. 

அணையில் இருந்து தண்ணீர் திறக்க நடைபெற்ற பூஜை.

இந்நிலையில், ஆனைமடுவு அணையில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறக்க வேண்டுமென, நேரடி ஆற்றுப்பாசன பழைய ஆயக்கட்டு மற்றும் அணை வாயக்கால் பாசன புதிய ஆயக்கட்டு விவசாயிகளும், பொதுப்பணித்துறை நீர்வள ஆதார அமைப்பு அதிகாரிகள் வாயிலாக தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.

இதனையடுத்து, ஆனைமடுவு அணையில் இருந்து  22 நாள் 28 முதல் 17 வாய்க்கால் பாசனம் 50 கனஅடி 223.81 மில்லியன் கனஅடி தண்ணீர் தேங்கியது. 

நிகழாண்டு முதல் போகத்திற்கு திறக்கப்பட்டதுபோக, அணையில் தற்போது 50.95 அடி அளவில் 131.57 மில்லியன் கன அடி தண்ணீர் தேங்கியுள்ளது. 

பாசனத்திற்கு தண்ணீர் திறந்து வைத்த ஆத்துார் உதவி செயற்பொறியாளர் கவிதாராணி,  ஆனைமடுவு அணை உதவி பொறியாளர் விஜயராகவன்.

இந்நிலையில், அணையில் இருந்து இரண்டாம் போக பாசனத்திற்கு தண்ணீர் திறக்க வேண்டும் என, அணை வாய்க்கால் பாசன ஆயக்கட்டு விவசாயிகள் மற்றும் ஆறு, ஏரிப் பாசன ஆயக்கட்டு விவசாயிகள் பொதுப்பணித்துறை வாயிலாக தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.

இதனையடுத்து, அணையில் இருந்து, பழைய ஆயக்கட்டு பாசனப் பகுதிகளுக்கு வெள்ளிக்கிழமை முதல் தொடர்ந்து 12 நாட்களுக்கு, வினாடிக்கு 60 கனஅடி வீதமும்,  வரும் மே 27 ஆம் தேதி முதல் தொடர்ந்து 9 நாள்களுக்கு வெள்ளிக்கிழமை முதல் வினாடிக்கு 60 கனஅடி வீதம் ஆறு மட்டும் ஏரி பாசனத்திற்கும், நிலத்தடி நீர்மட்டம் உயரவும், தொடர்ந்து 12 நாள்களுக்கு வசிஷ்டநதியில் தண்ணீர் திறக்கவும், அணை வலது மற்றும் இடது வாய்க்கால் பாசனத்திற்கு 27 -ஆம்‌ தேதியிலிருந்து 11 நாள்களுக்கு வினாடிக்கு 50 கன அடி வீதமும், இதனைத்தொடர்ந்து ஜூன் 15 -ஆம் தேதி முதல்  தொடர்ந்து 6 நாள்களுக்கு வினாடிக்கு 50 கன அடி வீதமும் தண்ணீர் திறந்து விட தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.

அணையில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர்

இதனையடுத்து,  சேலம் மாவட்ட ஆட்சியர் செ.கார்மேகம் உத்தரவின் பேரில், பொதுப்பணித்துறை நீர்வள ஆதார அமைப்பு சேலம் சரபங்கா வடிநில கோட்ட செயற்பொறியாளர் ஆனந்தன் தலைமையில், ஆத்துார் உதவி செயற்பொறியாளர் கவிதாராணி,  ஆனைமடுவு அணை உதவி பொறியாளர் விஜயராகவன்  மற்றும் விவசாய சங்க பிரதிநிகள்  முன்னிலையில், புழுதிக்குட்டை ஆனைமடுவு அணையில் இருந்து வெள்ளிக்கிழமை காலை பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டது. 

கத்திரி வெய்யிலில் வாடிவரும், நீண்டகால பலன் தரும் பாக்கு, தென்னை மற்றும் வாழை உள்ளிட்ட மரப்பயிர்களுக்கும், ஆண்டுகால மற்றும் குறுகிய காலப் பயிர்களுக்கும் பாசனத்திற்கு வழிவகை கிடைத்துள்ளதால், ஆனைமடுவு அணை பாசன வசதி பெறும் பழைய மற்றும் புதிய ஆயக்கட்டு பாசன விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com