சேலம்: கேரளம் மாநிலத்தில் பரவிவரும் தக்காளி வைரஸுக்கும், தக்காளிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று தமிழக மக்கள் நல்வாழ்வுத் துறை முதன்மைச் செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், கேரளத்தில் பரவி உள்ள தக்காளி வைரஸ் பற்றி அம்மாநில அதிகாரிகளுடன் விவாதிக்கப்பட்டுள்ளது. அண்டை மாநிலங்களில் வைரஸ் பற்றி கேட்டு, ஒருங்கிணைந்த தகவல் பரிமாற்ற முறையில் சிகிச்சைகள் பற்றி கேட்டறிந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மேலும் தக்காளி வைரஸ் என்பது ஏற்கனவே சிக்குன்குன்யாவால் பாதிக்கப்பட்டோருக்கு ஏற்படும் ஒரு புதிய வகை தொற்றாகும். நல்ல தண்ணீரில் உருவாகும் கொசுவினால் இது பரவுகிறது.
தோலில் சிவப்பு நிற புள்ளிகள் தென்படுவதால் இதற்கு தக்காளி வைரஸ் என்று பெயரிடப்பட்டு உள்ளது. தக்காளி வைரஸுக்கும், தக்காளிக்கும் எந்தவித தொடர்பும் இல்லை. எந்தவகை நோய்த்தொற்று வந்தாலும் அதை எதிர்கொள்ள தமிழக மருத்துவத்துறை தயார் நிலையில் உள்ளது என்றார்.