திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கு புறவழிச்சாலை: அமைச்சர் ஆய்வு

திருச்செந்தூர் கோயிலுக்கு புறவழிச்சாலை அமைப்பதற்கான இடங்களை அமைச்சர் எ.வ.வேலு மற்றும் அதிகாரிகள் வெள்ளிக்கிழமை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர். 
திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கு கடற்கரையில் புறவழிச்சாலை அமைப்பதற்கான இடத்தினை பார்வையிட்டு ஆய்வு செய்த நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு, அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன்.
திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கு கடற்கரையில் புறவழிச்சாலை அமைப்பதற்கான இடத்தினை பார்வையிட்டு ஆய்வு செய்த நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு, அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன்.

திருச்செந்தூர்: திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலுக்கு திருவிழாக் காலங்கள் மற்றும் விடுமுறை நாள்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் வருவதால் வாகனப் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது. இதனால் பக்தர்கள் நகரினை கடந்து செல்வதற்கு பெரிதும் சிரமமடைகின்றனர்.

இதனைத் தவிர்க்கும் விதமாக நகரின் எல்லையிலிருந்து கோயில் வரையில் புறவழிச்சாலை அமைப்பதற்கான திட்டம் அரசின் பரிசீலனையில் உள்ளது. இந்நிலையில் தமிழக பொதுப்பணி, நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு திருச்செந்தூர் கோயிலுக்கு புறவழிச்சாலை அமைப்பதற்கான இடங்களை வெள்ளிக்கிழமை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

திருச்செந்தூர் கோயில் அருகிலுள்ள பைரவர் கோயில் கடற்கரை பகுதியில் புறவழிச்சாலையின் வழித்தடங்கள் குறித்து அமைச்சர்கள் எ.வ.வேலு, அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் வரைபடங்கள் உதவியுடன் மாவட்ட ஆட்சியர் கி.செந்தில்ராஜ் மற்றும் நெடுஞ்சாலைத்துறை தலைமைப் பொறியாளர்கள் சந்திரசேகரன், பாலமுருகன் ஆகியோருடன் ஆலோசனை நடத்தினார்.

தொடர்ந்து அமைச்சர் கன்னியாகுமரி சாலையில் தோப்பூர் பகுதியிலும் புறவழிச்சாலை நிறைவடையும் இடத்தினை பார்வையிட்டார்.
தொடர்ந்து அமைச்சர் எ.வ.வேலு செய்தியாளர்களிடம் கூறியதாவது,

தூத்துக்குடியில் சாலைப்பணிகள் குறித்து ஆய்வுக் கூட்டத்திற்காக தற்போது வந்துள்ளேன். ஏற்கனவே அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் திருச்செந்தூர் கோயிலுக்கு வரும் பக்தர்கள் வசதிக்காக புறவழிச்சாலை அமைக்க முதல்வரிடம் வலியுறுத்தினார். அதன்பேரில் புறவழிச்சாலை அமைப்பது குறித்து ஆய்வு மேற்கொண்டேன்.

தூத்துக்குடி – திருச்செந்தூர் சாலையில் நகரின் எல்கையில் புறவழிச்சாலை துவங்கி வள்ளிக்குகை வரையில் சுமார் 1.75 கி.மீ. தொலைவிலும், நாழிக்கிணறு அருகே அய்யா கோயிலில் இருந்து தொடங்கி கன்னியாகுமரி செல்லும் சாலை வரையில் சுமார் 2.7 கி.மீ. தொலைவிலும் என இரண்டு புதிய சாலைகள் சுமார் 10 மீட்டர் அகலத்தில் அமைக்கடவுள்ளது. இதற்கான முழுமையான திட்ட விரிவாக்க பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளது.

மேலும் தூத்துக்குடி மக்களவைத் தொகுதி உறுப்பினர் கனிமொழி கேட்டுக்கொண்டதின் பேரில் இந்த புறவழிச்சாலையில் கடல்நீர் புகும் என்பதால் சுற்றுச்சூழல் துறை அனுமதியுடன் பாலம் மற்றும் 500 வாகனங்களுக்கான நிறுத்தம் அமைக்கப்படவுள்ளது. இதற்கான அனுமதி பெறுவதற்கான பணியினை மாவட்ட ஆட்சியர் மேற்கொள்வார்.

தமிழகத்தில் மாமல்லபுரத்திலிருந்து நாகப்பட்டினம் வரையிலான கிழக்கு கடற்கரைச்சாலையமைக்கும் பணியினை தேசிய நெடுஞ்சாலை ஆணையமே செய்து வருகிறது. இதனை விரைந்து முடிக்க நாங்கள் மத்திய அரசுக்கு தொடர்ந்து கடிதம் அனுப்பி வருகிறோம். திருச்செந்தூர் - வள்ளியூர் நெடுஞ்சாலையை தேசிய நெடுஞ்சாலை ஆணையத்திடம் ஒப்படைப்பதற்கான பணிகள் நடைபெறுகிறது என்று கூறினார்.

நிகழ்ச்சியின் போது, ஓட்டப்பிடாரம் சட்டப்பேரவை உறுப்பினர் எம்.சி.சண்முகையா, திருச்செந்தூர் கோட்டாட்சியர் புஹாரி, வட்டாட்சியர் சுவாமிநாதன், நெடுஞ்சாலைத்துறை திருநெல்வேலி கோட்ட கண்காணிப்பு பொறியாளர் பாலசுப்பிரமணியன், தூத்துக்குடி கோட்ட பொறியாளர் ஆறுமுகநயினார், திருச்செந்தூர் உதவி கோட்ட பொறியாளர் விஜய சுரேஷ்குமார், உதவி பொறியாளர் சுபின், சாலை ஆய்வாளர்கள் ரமேஷ், ராணி, கிராம நிர்வாக அலுவலர் வைரமுத்து உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com