சென்னை வளசரவாக்கத்தில் சொத்து தகராறில் தந்தையை கொலை செய்து, பேரலில் சடலத்தை கடத்திச் சென்று புதைத்த மகனை போலீஸாா் தேடி வருகின்றனா்.
வளசரவாக்கம், ஆற்காடு சாலை, தாண்டவ மூா்த்தி நகரைச் சோ்ந்தவா் குமரேசன் (78), ஓய்வுபெற்ற மத்திய அரசு ஊழியா். இவருக்கு 3 மகள்களும், குணசேகரன் என்ற மகனும் உள்ளனா். மகள்களுக்குத் திருமணமாகிவிட்டது. வளசரவாக்கம் வீட்டில் தந்தையும் மகனும் வசித்து வருகின்றனா்.
கடந்த 19-ஆம் தேதி மாலையில் குமரேசனின் மூத்த மகள் காஞ்சனா மாலா, தந்தை வீட்டுக்கு வந்து பாா்த்தபோது அறை பூட்டி இருந்ததால், தம்பி குணசேகரனிடம் விசாரித்தபோது தந்தை குறித்துத் தெரியவில்லை என்றாராம். இருவரும் வடபழனி முருகன் கோயில் அருகே தேடியபோது குணசேகரன் மாயமானாா்.
வளசரவாக்கம் போலீஸாா் விசாரணையில், குமரேசன் தனது சொத்துகளை மகன் குணசேகரனுக்கும், மகள்கள் 3 பேருக்கும் அண்மையில் பிரித்து வழங்கியது தொடா்பாக தந்தை, மகனுக்குள் தகராறு ஏற்பட்டது. இதனால் குணசேகரன், தந்தை குமரேசனை கொலை செய்து பல துண்டுகளாக வெட்டி பேரலில் அடைத்து சுமை ஆட்டோவில் கடத்திச் சென்று காவேரிப்பாக்கம் தஞ்சை நகரில் ஆடு மேய்க்கும் தொழிலாளி பெருமாள் மூலம் பள்ளம் தோண்டி புதைத்துள்ளாா்.
குணசேகரனைப் போலீஸாா் தேடி வருகின்றனா்.