பருவமழையின்போது சம்பா பயிர்கள் மழை நீரில் மூழ்காமல் காக்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதி அளித்துள்ளார்.
டெல்டா மாவட்டங்களில் மேற்கொண்ட ஆய்வுகள் குறித்து திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசினார்.
அப்போது அவர் பேசியதாவது, அனைத்து நீர்வழித் தடங்களிலும் தூர் வாரும் பணிகள் நடைபெற்று வருகின்றன. டெல்டா மாவட்டங்களில் தூர் வாரும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
மகசூல் பெருக்கம், மகிழும் விவசாயி என்ற வாக்குறுதி செயல்படுத்தப்படுகிறது. அந்த வகையில், காவிரி டெல்டா பாசனத்திற்காக முன்கூட்டியே மேட்டூர் அணை திறக்கப்பட்டுள்ளது.
அணையை முன்கூட்டி திறப்பதால் 5.20 லட்சம் ஹெக்டர் சாகுபடி அதிகரிக்கும்
வடகிழக்கு பருவமழையின்போது சம்பா பயிர்கள் மழை நீரில் மூழ்காமல் காக்கப்படும்.
பருவ மழைக்கு முன்பு டெல்டா மாவட்டங்களில் ரூ.80 கோடியில் தூர்வாரும் பணிகள் நடைபெற்று வருகின்றன. 7 உறுதி மொழிகளை நிறைவேற்றும் வகையில், தமிழக அரசின் திட்டங்கள் உள்ளன.
டெல்டா மாவட்டங்களில் கடைமடை பகுதி வரைக்கும் மேட்டூர் அணை நீர் சென்று சேரும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனக் குறிப்பிட்டார்.