புதுச்சேரியில் நள்ளிரவில் வீட்டின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனத்தை திருட முயற்சிக்கும் மர்ம நபர்கள், வாகனத்தை திருட முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்லும் சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புதுச்சேரியில் தொடர்ச்சியாக இருசக்கர வாகனங்கள் திருட்டுச் சம்பவம் அதிகரித்து வருகிறது. அவ்வப்போது திருட்டுச் சம்பவத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்து வாகனங்களை பறிமுதல் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் புதுச்சேரியில் காமாட்சி அம்மன் கோயில் தெருவில் ஒரு வீட்டின் முன்பு இரண்டு இருசக்கர வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.
அதிகாலை 3 மணி அளவில் அவ்வழியாக பைக்கில் வந்த இரண்டு மர்ம நபர்களில் ஒருவன் இறங்கி வீட்டின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பைக்கின் சைடு லாக்கை உடைத்து திருட முயற்சிக்கிறான். ஆனால் 2 பைக்குகளுக்கும் ஒயர்லாக் போட்டு பூட்டியுள்ளதால் வண்டியை எடுக்க முடியவில்லை. இதனையடுத்து அந்த மர்ம நபர்கள் இருவரும் வாகனத்தை திருடாமல் ஏமாற்றத்துடன் அங்கிருந்து தப்பிச் செல்கின்றனர். இந்த காட்சிகள் அனைத்தும் அந்த வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.
வீட்டின் உரிமையாளர் இந்த வீடியோவை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.