விவசாயியின் வீட்டுக்குள் புகுந்து அச்சுறுத்திய 7 அடி நீளமுள்ள கருநாகப் பாம்பை பாம்பு பிடிப்பவர் பத்திரமாக மீட்டார்.
ஈரோடு அடுத்த நசியனூர் முள்ளம்பட்டியைச் சேர்ந்தவர் திவாகர். புதன்கிழமை இரவு எதிர்பாராத விதமாக வீட்டினுள் இருந்து வித்தியாசமாக சத்தம் கேட்டு உள்ளது. அதிர்ந்து போன அவர் உள்ளே தேடிப் பார்த்ததில் ஏழு அடி நீளத்தில் பாம்பு ஒன்று கழிவறைக்குள் புகுந்து மறைந்து கொண்டது. உடனடியாக, ஈரோட்டைச் சேர்ந்த பாம்பு பிடி வீரர் யுவராஜுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
விரைந்து வந்த பாம்பு பிடி வீரர் யுவராஜ், கழிவறைக்குள் புகுந்து அச்சுறுத்திய கருநாகப் பாம்பை பத்திரமாக மீட்டார். அதன் கோபத்தை தண்ணீர் ஊற்றி தணித்தார். அதனைத் தொடர்ந்து வனத்துறையிடம் பத்திரமாக கருநாகப் பாம்பு ஒப்படைக்கப்பட்டது.