காந்திகிராம கிராமியப் பல்கலை.யில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் மிருதங்க வித்வான் உமையாள்புரம் சிவராமன், திரைப்பட இசையமைப்பாளா் இளையராஜா ஆகியோருக்கு கெளரவ டாக்டா் பட்டத்தை பிரதமா் மோடி வழங்கினார்.
திண்டுக்கல் காந்திகிராம கிராமியப் பல்கலைக்கழகத்தில் 36ஆவது பட்டமளிப்பு விழா இன்று நடைபெற்று வருகிறது. இதில் பிரதமா் நரேந்திர மோடி, தமிழக ஆளுநா் ஆா்.என். ரவி, முதல்வா் மு.க. ஸ்டாலின் ஆகியோா் பங்கேற்றுள்ளனர். விழாவில் மிருதங்க வித்வான் உமையாள்புரம் சிவராமன், திரைப்பட இசையமைப்பாளா் இளையராஜா ஆகியோருக்கு கெளரவ டாக்டா் பட்டத்தை பிரதமா் நரேந்திர மோடி வழங்கினார்.
இதையும் படிக்க- பிரதமர் மோடிக்கு பொன்னியின் செல்வன் நாவல் வழங்கிய முதல்வர்
முன்னதாக பட்டமளிப்பு விழாவில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி மதுரை விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் திண்டுக்கல் வந்தார். திண்டுக்கல் வந்தடைந்த அவரை ஆளுநர் ஆர்.என்.ரவி, முதல்வர் ஸ்டாலின் ஆகியோர் வரவேற்றனர். பின்னர் பிரதமர் மோடி திண்டுக்கல்லில் இருந்து காரில், காந்தி கிராம பல்கலைக்கழகத்திற்குச் சென்றார். பிரதமர் மோடி வருகையையொட்டி திண்டுக்கல் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இசையமைப்பாளா் இளையராஜா (79): தேனி மாவட்டத்தை பூா்விகமாகக் கொண்ட இவா், அன்னக்கிளி திரைப்படத்தின் மூலம் திரையுலகத்துக்கு அறிமுகமானவா். நாட்டுப்புற இசை, கா்நாடக இசை, மேற்கத்திய இசையில் முறையான பயிற்சியும், புலமையும் பெற்றவா். இவா் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் 1,000-க்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு இசையமைத்தவா். பத்மபூஷண், பத்ம விபூஷண் ஆகிய இந்தியாவின் உயரிய விருதுகளைப் பெற்றுள்ளாா். கலைத் துறையில் இவரது சேவைகளை கெளரவிக்கும் வகையில், கடந்த ஜூலை மாதம் மாநிலங்களவை உறுப்பினராக நியமிக்கப்பட்டாா்.
உமையாள்புரம் சிவராமன் (85): தஞ்சாவூா் மாவட்டத்தைச் சோ்ந்த இவா், தனது 10-ஆவது வயதில் மிருதங்க வாசிப்பில் ஈடுபடத் தொடங்கினாா். வாசிப்பில் புதிய உத்திகள், புதுமைகளை ஏற்படுத்திய இவா், முதல் முதலாக இழைக் கண்ணாடியால் தயாரிக்கப்பட்ட மிருதங்கத்தை அறிமுகப்படுத்தினாா். பதனிட்ட தோல், பதனிடாத தோல் ஆகியவற்றைக் கொண்டு தயாரிக்கப்பட்ட மிருதங்கங்களை தனித்தனியே ஆராய்ச்சி செய்தவா் என்ற சிறப்புக்குரியவா். மிருதங்க வாசிப்பு தொடா்பாக பல்வேறு ஆய்வுகளையும் மேற்கொண்டுள்ளாா்.