நெல்லை மாவட்டம் கல்லிடைக்குறிச்சி அருகே கரடி நடமாட்டம் இருப்பதை கண்காணித்த வனத்துறையினர் இரவில் தீ பந்தம் ஏற்றி கரடியை விரட்டும் பணியில் ஈடுப்பட்டு வருகின்றனர்.
நெல்லை மாவட்டம், கல்லிடைக்குறிச்சி அருகே மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியில் யானை, கரடி, சிறுத்தை உள்ளிட்ட ஏராளமான வனவிலங்குகள் உள்ளன. மேலும், அவ்வப்போது மலை அடிவாரப்பகுதிகளுக்கு இவை கீழே இறங்கி வருவது வழக்கமாகி வருகிறது.
இந்த நிலையில் கடந்த சில நாள்களுக்கு முன்பு இரவில் தெற்கு பாப்பான் குளம் மற்றும் அங்குள்ள கோயில் வளாக பகுதியில் கரடி நடமாட்டம் இருப்பது கண்காணிப்பு கோமிராவில் பதிவாகி இருந்தது.
ஓரிரு நாள்கள் முன்பு தென்காசி மாவட்டம் கடையம் அருகே உள்ள பெத்தான்பிள்ளை குடியிருப்பு பகுதியில் மூன்று நபர்களை கரடி கடித்து குதறியது. வனத்துறையினர் மயக்க ஊசி செலுத்தி பிடித்த நிலையில் தொற்று காரணமாக கரடி உயிரிழந்ததாக வனத்துறையினர் தெரிவித்தனர்.
அதேபோன்று தற்போது தெற்குபாப்பான் குளம் பகுதியில் கரடி நடமாட்டம் இருப்பதால் பொதுமக்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர். கரடியை கூண்டு வந்து பிடிக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்நிலையில், களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பக துனை இயக்குநர் செண்பக பிரியா உத்திரவின் பேரில் அம்பாசமுத்திரம் வனச்சரக வேட்டை தடுப்பு காவலர்கள் இரண்டு குழுக்களாக அமைக்கப்பட்டு தீ பந்தம் ஏற்றி இரவில் கரடியை விரட்டும் பணியில் ஈடுப்பட்டு வருகின்றனர்.
வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு வரும் நிலையிலும் பொதுமக்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளதால் அப்பகுதி பரப்பரப்பாக காணப்படுகிறது.