கள்ளக்குறிச்சி: மாணவியின் செல்லிடப்பேசியை ஒப்படைக்க உத்தரவு

கள்ளக்குறிச்சி தனியார் பள்ளியில் உயிரிழந்த மாணவியின் செல்லிடப்பேசியை ஒப்படைக்குமாறு பெற்றோருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
கள்ளக்குறிச்சி: மாணவியின் செல்லிடப்பேசியை ஒப்படைக்க உத்தரவு
கள்ளக்குறிச்சி: மாணவியின் செல்லிடப்பேசியை ஒப்படைக்க உத்தரவு

கள்ளக்குறிச்சி தனியார் பள்ளியில் உயிரிழந்த மாணவியின் செல்லிடப்பேசியை ஒப்படைக்குமாறு பெற்றோருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

கள்ளக்குறிச்சி பள்ளியில் உயிரிழந்த மாணவியின் செல்லிடப்பேசியை பெற்றோர், விசாரணைக்கு ஒப்படைக்கவில்லை என்று காவல்துறை தரப்பில் ஆஜராக அரசி தலைமை குற்றவியல் வழக்குரைஞர் அசன் முகமது ஜின்னா, சென்னை உயர் நீதிமன்றத்தில் முறையிட்டார்.

இதையடுத்து, நியாயமான விசாரணை நடைபெற, மரணமடைந்த மாணவி பயன்படுத்திய செல்லிடப்பேசியை, காவல்துறையிடம் ஒப்படைக்குமாறு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

கள்ளக்குறிச்சி மாணவியின் பெற்றோா் ஒத்துழைக்க மறுப்பு: சிபிசிஐடி புகாா்

கள்ளக்குறிச்சி மாணவி மரண வழக்கு விசாரணைக்கு, அவரின் பெற்றோா் ஒத்துழைப்பு தர மறுப்பதாக சிபிசிஐடி தரப்பில் சென்னை உயா் நீதிமன்றத்தில் ஏற்கனவே புகாா் தெரிவிக்கப்பட்டது.

கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி மரணம் தொடா்பாக அவரது தந்தை ராமலிங்கம் தொடுத்த வழக்கு கடந்த அக்டோபர் மாதம் விசாரணைக்கு வந்தபோது, புலன் விசாரணையை விரைந்து மேற்கொண்டு விரைவில் இறுதி அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்று சிபிசிஐடி தரப்புக்கு சென்னை உயா் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. 

இந்த வழக்கு நீதிபதி சிவஞானம் முன் மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, சிபிசிஐடி தரப்பில் அறிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டன. அப்போது குறுக்கிட்ட நீதிபதி, ‘வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றக் கோரி கோரிக்கை விடுத்த நிலையில், வழக்கு தற்போது சிபிசிஐடி போலீஸாா் விசாரித்து வருவதால் இந்த மனுவை ஏன் முடித்து வைக்கக்கூடாது என்று கேள்வி எழுப்பினாா்.

அப்போது, மனுதாரா் தரப்பு வழக்குரைஞா், ‘உயா் நீதிமன்றம் இந்த வழக்கின் விசாரணையை கண்காணித்து வருகிறது. ஏற்கெனவே, இரண்டு அறிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், தற்போது மீண்டும் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு இருக்கிறது. மேலும், வழக்கு தொடா்பாக விழுப்புரம் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள பிரேத பரிசோதனை அறிக்கை தொடா்பான விடியோ காட்சிகள் அடங்கிய குறுந்தகட்டை தங்களுக்கு வழங்க வேண்டும்’ என்று கோரிக்கை விடுத்தாா்.

அப்போது, அரசு தலைமை குற்றவியல் வழக்குரைஞா், ‘ஏற்கெனவே இந்த வழக்கின் புலன் விசாரணை முடியும் வரை வழக்கு தொடா்பான ஆவணங்களை மாணவியின் பெற்றோா் தரப்புக்கு வழங்கக் கூடாது என நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த வழக்கின் புலன் விசாரணைக்கு மாணவியின் பெற்றோா் ஒத்துழைக்க மறுக்கின்றனா். விடுதியில் மாணவி பயன்படுத்திய கைப்பேசியை வழங்கவும், மரபணு சோதனைக்கு மாதிரிகள் வழங்கவும் அவா்கள் மறுப்பு தெரிவிக்கின்றனா்’ என்று குற்றம் சாட்டினாா்.

இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி, மாணவி கைப்பேசி பயன்படுத்தி இருந்தால், அதை புலன் விசாரணை செய்யும் சிபிசிஐடி போலீஸாரிடம் வழங்க வேண்டும் என மாணவியின் பெற்றோருக்கு உத்தரவிட்டாா். 

நீதிமன்றம் உத்தரவிட்டும், மாணவியின் பெற்றோர், செல்லிடப்பேசியை ஒப்படைக்கவில்லை என்று சிபிசிஐடி தரப்பில் மீண்டும் கூறப்பட்டதையடுத்து, மாணவி பயன்படுத்திய செல்லிடப்பேசியை ஒப்படைக்குமாறு பெற்றோருக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com