அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் சபரிமலைக்கு சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர் தகவல் தெரிவித்துள்ளார்.
கேரள மாநிலத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற சபரிமலையில் உள்ள ஐயப்பன் ஆலயத்திற்கு, ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு ஆகிய திருவிழாக்களின்போது, தமிழகத்திலிருந்து ஐயப்ப பக்தர்கள் சென்று வர ஏதுவாக, தமிழகத்தின் முக்கிய நகரங்களிலிருந்து அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் ஆண்டுதோறும் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், இந்த ஆண்டும் நவம்பர் 17 முதல் 20 ஆம் தேதி வரையில், சென்னை, திருச்சி, மதுரை மற்றும் புதுச்சேரி/கடலூர் ஆகிய இடங்களிலிருந்து பம்பைக்கு, அதிநவீன சொகுசு மிதவைப் பேருந்துகள் (Ultra Deluxe) மற்றும் குளிர்சாதனமில்லா இருக்கை மற்றும் படுக்கை வசதி உள்ள (NSS) சிறப்புப் பேருந்துகளாக இயக்கப்படவுள்ளன.
இந்த ஆண்டு பக்தர்கள் கூடுதலாக பயணம் செய்ய முன்வருவார்கள் என எதிர்பார்க்கப்படுவதாகவும் அவற்றினை கருத்தில் கொண்டு சென்னை மற்றும் இதர இடங்களிலிருந்து கூடுதலாக பேருந்துகள் இயக்கவதற்கு அனுமதி பெறப்பட்டு சிறப்பான முறையில் பேருந்துகளை இயக்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.
மேலும், 30 நாட்களுக்கு முன்னதாக இச்சிறப்புப் பேருந்துகளுக்கு ஆன்லைன் மூலமாக, www.tnstc.in இணையதளம் மற்றும் டிஎன்எஸ்டிசி மொபைல் செயலி மூலமாக முன்பதிவு செய்துகொள்ளலாம்.
மேலும், பேருந்துகளின் விவரம் உள்ளிட்ட பல்வேறு தகவல்களுக்கு, 9445014452, 9445017793, 9445014424, 9445014463 மற்றும் 9445014416 ஆகிய கைப்பேசி எண்களைத் தொடர்பு கொண்டு அறிந்து கொள்ளலாம் என்றும் தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.