
சென்னை: எழும்பூர் காவல் நிலையம் அருகே பட்டப்பகலில் இளைஞர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை வியாசர்பாடி, கன்னிகாபுரத்தை சேர்ந்தவர் விக்கி என்கின்ற விக்னேஷ். திருமணமாகி அயனாவரம், பக்தவச்சலம் தெருவில் மனைவி, குழந்தையுடன் தனியாக வசித்து வந்தார்.
இதையும் படிக்க.. உனக்கு செட்டே ஆக மாட்டேன்: தடாலடித்த லேடி சூப்பர் ஸ்டார்!
இவர் சென்னை எழும்பூர் காவல் நிலையம் அருகே உள்ள தனியார் இன்டர்நெட் இணைப்பு தரும் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். இவரது மனைவி தேவப்பிரியா சென்னை எழும்பூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் பணிபுரிந்து வருகிறார்.
இன்று காலை தேவ பிரியாவை அவரது அலுவலகத்தில் விட்டு விட்டு எழும்பூர் நெடுஞ்சாலை அருகே உள்ள அவரது நிறுவனத்திற்கு வந்துள்ளார். அப்போது நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்களுடன் தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது, சந்தோஷ் என்ற ஊழியர் விக்னேஷை சரமாரியாக வெட்டியுள்ளார். அவரைத் தடுக்கச் சென்ற அருகில் இருந்த மற்றொரு நபருக்கும் வெட்டுக்காயம் ஏற்பட்டது. அதிகப்படியாக வெட்டுக் காயங்களுடன் தப்ப முயன்ற விக்னேஷ் அந்த வளாகத்திலேயே தொடர்ந்து தாக்கப்பட்டுள்ளார். இதில் சம்பவ இடத்திலேயே விக்னேஷ் உயிரிழந்துள்ளார்.
படுகொலை செய்த கொலைக் குற்றவாளிகள் அலுவலகத்தின் மாடியில் ஏறி கட்டடம் விட்டு கட்டடம் ஏறி குதித்து தப்பித்துள்ளனர். இது தொடர்பாக திருவல்லிக்கேணி துணை ஆணையர் சேகர் தேஷ்முக் தலைமையில் காவல்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டனர்.
மேலும் மோப்பநாய் வரவழைக்கப்பட்டு கொலை நடந்த இடத்தில் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. பட்டப்பகலில் நடைபெற்ற இந்தப் படுகொலை சம்பவம் அப்பகுதி முழுவதும் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் இதேப் பகுதியில் 50 அடி தொலைவில் தான் எழும்பூர் காவல் நிலையம் செயல்பட்டு வருகிறது காவல் நிலையம் அருகிலேயே இந்த படுகொலை சம்பவத்தை குற்றவாளிகள் அரங்கேற்றி இருப்பது பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.