காசி சங்கமம் மூலம் மாணவர்களுக்கு பயிற்சி அளிக்க ஆர்.எஸ்.எஸ் திட்டம்: கே. பாலகிருஷ்ணன் பேட்டி
காசி சங்கமம் என்ற பெயரில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களை ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தில் பயிற்சி அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் தமிழக அரசு வேடிக்கை பார்க்க கூடாது. இது தொடரும் பட்சத்தில் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ரயில் மறியல் போராட்டம் நடத்தப்படும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.
கே. பாலகிருஷ்ணன் வெள்ளிக்கிழமை செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் தொடர்ந்து தாக்கப்பட்டு வருகின்றனர். இலங்கை கடற்படையினரின் இந்த நடவடிக்கைகளை தடுத்து நிறுத்தக் கோரி தமிழக அரசு சார்பிலும், அரசியல் கட்சிகள் சார்பிலும் மத்திய அரசுக்கு வலியுறுத்தப்பட்டு வருகிறது. ஆனாலும் மத்திய அரசு இந்த விவகாரத்தில் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இலங்கை அரசாங்கத்துடன் மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்தி தமிழக மீனவர் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும்.
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஏழு பேரை சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி உச்ச நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது. அதற்கு எதிராக மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்துள்ளது. இதன் மூலம் 7 ஏழு பேர் விடுதலை காலதாமதம் ஆனதற்கு மத்திய அரசே காரணம் என்பது தெளிவாகிறது.
இதையும் படிக்க | சென்னை ஐஐடி-இல் வேலை: பொறியியல் பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்!
மேலும், காசி சங்கமம் என்ற பெயரில் ஐஐடி மாணவர்கள் 2,500 பேரை காவி துண்டு போர்த்தி தமிழக ஆளுநர் மற்றும் மத்திய இணை அமைச்சர் முருகன் ஆகியோர் வழி அனுப்பி வைத்துள்ளனர். காசி சங்கமம் நிகழ்ச்சி மத்திய மாநில அரசுகள் சார்பில் ஏற்பாடு செய்யப்படவில்லை. காசி சங்கமம் என்ற பெயரில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களை ஆர். எஸ். எஸ் இயக்கத்தில் பயிற்சி அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் தமிழக அரசு வேடிக்கை பார்க்கக் கூடாது. இது தொடரும் பட்சத்தில் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ரயில் மறியல் போராட்டம் நடத்தப்படும்.
மத்திய அரசு அலுவலகங்களில் இந்தி குழு அமைக்கப்பட்டு இந்தி மொழியின் பயன்பாடு குறித்து மதிப்பீடு செய்யப்பட்டு வருகிறது. இந்தி குழு செயல்பாடுகளை தடுக்க தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழகத்தில், தமிழ் 100% அலுவல் மொழியாக இல்லை. அரசாணைகள் தமிழில் வெளியிடப்படுவது இல்லை. இந்தி மட்டுமின்றி ஆங்கிலமும் தமிழகத்தில் திணிக்கப்பட்டு வருகிறது. தொடக்க கல்வியை தமிழ் வழியில் கற்பிப்பதற்கு மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசு துறைகளில் வெளிமுகமை மூலம் பணி நியமனம் செய்யும் அரசாணை திரும்ப பெறப்படும் என தமிழக முதல்வர் உறுதி அளித்துள்ளார். ஆனாலும் முதல்வருக்கு தெரியாமல் அரசாணை எப்படி வெளியானது. வெளிமுமுகமை மூலம் பணியாளர்கள் தேர்வு செய்யப்பட்டால் 69 சதவிகித இட ஒதுக்கீடு கேள்விக்குறியாகும். தொகுப்பு ஊதியம் மதிப்பூதியம் பெறும் பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று கே. பாலகிருஷ்ணன் கூறினார்.
அப்போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில குழு உறுப்பினர் என். பாண்டி, மாவட்டச் செயலர் சச்சிதானந்தம் ஆகியோர் உடன் இருந்தனர்.