தஞ்சை: தஞ்சை அருகே கொள்ளிடம் ஆற்றில் குளித்துக் கொண்டிருந்த சுற்றுலாப் பயணிகள் ஆறு பேர் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டதால் அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டது.
உடனடியாக மீட்புப் படையினர் விரைந்து வந்து ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். இதில், அடித்துச் செல்லப்பட்டவர்களில் இரண்டு பேரின் உடல்கள் மட்டும் மீட்கப்பட்டுள்ளது. காணாமல் போன 4 பேரை மீட்புப் படையினர் தேடி வருகிறார்கள்.
தூத்துக்குடியிலிருந்து சுற்றுலா வந்த 6 பேரில் இரண்டு பேரின் உடல்கள் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
தூத்துக்குடியிலிருந்து திருக்காட்டுப்பள்ளி அருகே பூண்டிமாதா கோயிலுக்கு வந்த பக்தர்கள் கொள்ளிடம் ஆற்றில் குளித்தபோது இந்த துயரச் சம்பவம் நடந்துள்ளது.
மீட்கப்பட்டவர்களின் உடலைப் பார்த்து உறவினர்கள் கதறி அழுதது பார்ப்போரை கலங்கச் செய்தது. மறுபக்கம் காணாமல் போன 4 பேரை தேடும் பணியும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.