திருவள்ளூர்: திருவள்ளூர் அருகே கட்டப்பட்டிருந்த தீண்டாமை சுவர் காவல்துறையினர் பாதுகாப்புடன் இடிக்கப்பட்டது.
திருவள்ளூர் மாவட்டம், ஆரம்பாக்கம் அருகே தோக்கமூரில் சுமார் 100க்கும் மேற்பட்ட பட்டியலின குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் கூலி வேலையை மட்டுமே நம்பி வாழ்ந்து வருகின்றனர்.
இந்த நிலையில் கடந்த 2015 ஆம் ஆண்டு திரௌபதி அம்மன் கோயில் அருகே இருந்த அரசு புறம்போக்கு நிலத்தில் தீண்டாமை சுவர் கட்டப்பட்டது.
மாற்று சமூகத்தினரால் கட்டப்பட்ட இந்த சுவரால் பட்டியலின மக்கள் தங்களது கால்நடைகளை மேய்ச்சலுக்கு கொண்டு செல்லவோ, கூலி வேலைக்கு அந்த வழியாக செல்லவோ முடியாத சூழல் ஏற்பட்டது.
எனவே, இந்த தீண்டாமை சுவரை இடித்து அகற்றுமாறு பட்டியலின மக்களும், அப்பகுதியைச் சேர்ந்த பல்வேறு தரப்பினரும் அரசுக்கு தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்தனர்.
இதையடுத்து இந்த சுவரை இடிப்பதற்காக அந்த கிராம மக்களிடையே பொன்னேரி, கும்மிடிப்பூண்டி வட்டாட்சியர் அலுவலகங்களில் பல கட்ட அமைதி பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.
இந்நிலையில், அந்த தீண்டாமை சுவரை இடித்து அகற்றுமாறு மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் உத்தவிட்டார்.
இதையடுத்து திங்கள்கிழமை அதிகாலை கும்மிடிப்பூண்டி வட்டாட்சியர் கண்ணன் தலைமையிலான அதிகாரிகள் 5 ஜேசிபி இயந்திரங்கள் உதவியுடன் தீண்டாமை சுவரை இடித்து அகற்றினர்.
அசம்பாவித சம்பவங்களை தவிர்க்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 150க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.