எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். உள்ளிட்ட மருத்துவப் படிப்புகளுக்கு விண்ணப்பிக்க கால அவகாசத்தை நீட்டித்து மருத்துவக் கல்வி இயக்குநரகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
மருத்துவப் படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு முடிவுகள் வெளியான நிலையில் 2022-23 ஆம் கல்வியாண்டில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். உள்ளிட்ட மருத்துவப் படிப்புகளுக்கு வருகிற செப்டம்பர் 22 முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்று மருத்துவக் கல்வி இயக்குநரகம் அறிவித்தது.
http://tnhealth.tn.gov.in, http://tnmedicalselection.org என்ற இணையதளங்களில் வருகிற அக்டோபர் 3 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று கூறியிருந்தது.
அதன்படி, மருத்துவப் படிப்புகளுக்கு விண்ணப்பிக்க இன்றுடன் கால அவகாசம் முடிவடையவிருந்த நிலையில், வருகிற அக்டோபர் 6 ஆம் தேதி மாலை 5 மணி வரை நீட்டிப்பு செய்து மருத்துவக் கல்வி இயக்குநரகம் அறிவித்துள்ளது.
விண்ணப்பம் முடிவடைந்த பின்னர் மருத்துவக் கலந்தாய்வு நடைபெறும் தேதிகள் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.