காஞ்சிபுரம் கேஸ் சிலிண்டர் விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 8 ஆக அதிகரித்துள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் ஒன்றியத்துக்கு உள்பட்ட தேவரியம்பாக்கத்தில் அக்கிராம ஊராட்சி மன்ற தலைவர் சாந்திக்கு சொந்தமான கேஸ் சிலிண்டர்கள் கிடங்கு இருந்து வந்தது. தொழிற்சாலைகளுக்கு விநியோகம் செய்வதற்காக வைக்கப்பட்டிருந்த இக்கிடங்கில் கடந்த 28 ஆம் தேதி வாயுக்கசிவு ஏற்பட்டு உருளைகள் வெடித்துச் சிதறின.
இச்சம்பவத்தில் 6 ஆண்கள், 5 பெண்கள் ஒரு சிறுவர் உள்பட மொத்தம் 12 பேர் பலத்த காயம் அடைந்து செங்கல்பட்டு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர். இவர்களில் சிலர் மிகவும் கவலைக்கிடமான நிலையில் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையிலும் சேர்க்கப்பட்டிருந்தனர். சம்பவத்தில் தொடர்புடைய கிடங்கு அதிகாரிகளால் பூட்டி சீல் வைக்கப்பட்டது.
இச்சம்பவம் தொடர்பாக ஒரகடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஊராட்சி மன்ற தலைவர் சாந்தி உட்பட 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்து இருவரை கைது செய்துள்ளனர்.
இச்சம்பவத்தில் கடலூரைச் சேர்ந்த ஆமோத்குமார்(26), ஜீவானந்தம்(46), இவரது மகள் சந்தியா(21), கும்பகோணத்தைச் சேர்ந்த குணாளன்(22), தேவரியம்பாக்கத்தை சேர்ந்த கோகுல்(22), சண்முகப்பிரியன்(17), கிஷோர்(22) ஆகிய 7 பேர் உயிரிழந்தனர்.
இந்நிலையில், செங்கல்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி அருண்(30) என்பவர் இன்று உயிரிழந்ததையடுத்து பலி எண்ணிக்கை 8 ஆக உயர்ந்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.