வறிய நிலையில் உள்ள 10 கலைமாமணி விருதாளர்களுக்கு பொற்கிழி மற்றும் 500 கிராமியக் கலைஞர்களுக்கு இசைக் கருவிகள் மற்றும் ஆடை, அணிகலன்கள் வாங்கிட முதல்வர் ஸ்டாலின் இன்று நிதியுதவி வழங்கினார்.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறில், முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று தலைமைச் செயலகத்தில், தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தின் சார்பில் வறிய நிலையில் உள்ள 10 கலைமாமணி விருதாளர்களுக்கு பொற்கிழியாக தலா 1 லட்சம் ரூபாய்க்கான காசோலைகளை வழங்கிடும் விதமாக 9 கலைமாமணி விருதாளர்களுக்கு காசோலைகளையும், 500 கிராமியக் கலைஞர்களுக்கு இசைக் கருவிகள் மற்றும் ஆடை, அணிகலன்கள் வாங்கிட தலா 10 ஆயிரம் ரூபாய்க்கான காசோலைகளை நிதியுதவியாக வழங்கிடும் அடையாளமாக 10 கிராமியக் கலைஞர்களுக்கு நிதியுதவியும் வழங்கினார்.
தமிழ்நாடு சங்கீத நாடக மன்றம் என்ற அமைப்பு தமிழக பாரம்பரிய கலைகளை ஊக்குவிக்க 1955-ஆம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்டு, தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம் என 1973-ஆம் ஆண்டு முத்தமிழறிஞர் கருணாநிதியால் பெயர் மாற்றம் செய்யப்பட்டது. கலை நிகழ்ச்சிகளில் வாய்ப்புகள் வழங்கி இளம் கலைஞர்களை ஊக்குவித்தல், அயல்நாடுகளில் தமிழகக் கலைகளைப் பரப்புதல், கலைச்சேவை புரிந்த கலைஞர்களுக்கு மாநில அளவில் கலைமாமணி விருது வழங்குதல், அரிய கலை வடிவங்களை ஆவணப்படுத்துதல், அரிய கலை நூல்களைப் பதிப்பித்திட நிதியுதவி வழங்குதல், நலிந்த நிலையில் வாழும் மூத்த கலைஞர்களுக்கு மாதந்தோறும் நிதியுதவி வழங்குதல், மறைந்த புகழ்பெற்ற கலைஞர்களின் குடும்பங்களுக்கு குடும்ப பராமரிப்பு நிதியுதவி வழங்குதல் போன்ற பல்வேறு திட்டங்களை இயல், இசை, நாடக வளர்ச்சிக்காக செயல்படுத்தி வருகிறது.
2021-22ஆம் ஆண்டிற்கான சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை மானியக் கோரிக்கையில், கலைமாமணி விருது பெற்றவர்களில், வயோதிக நிலையில், பொருளாதாரத்தில் நலிந்து இன்னலில் வாழ்கின்ற கலைஞர்கள் பயன்பெறும் வகையில் ஆண்டுதோறும் தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தின் வாயிலாக தற்போது வழங்கப்படும் பொற்கிழித் தொகை ரூ.50,000/- லிருந்து ரூ.1 இலட்சம் ஆக உயர்த்தி 10 கலைஞர்களுக்கு வழங்கப்படும் என்று
அறிவிக்கப்பட்டது.
அதன்படி, தேர்ந்தெடுக்கப்பட்ட வறிய நிலையில் உள்ள 10 கலைமாமணி விருதாளர்களில், 9 கலைமாமணி விருதாளர்களான கோவை நடராஜன்,
சாந்தி கணேஷ், எம்.யு. பிரேம்குமார், நா. கருமுத்து தியாகராசன், பிரசாத் வி.சி. ராஜேந்திரன், ஆ. லெட்சுமி, என்.ஜி. கணேசன், என். வேலவன் சங்கீதா, வை. இராஜநிதி ஆகியோருக்கு தமிழ்நாடு முதல்வர் பொற்கிழித் தொகையாக தலா 1 இலட்சம் ரூபாய்க்கான காசோலைகளை வழங்கினார்.
தமிழ்நாடு நாட்டுப்புறக் கலைஞர்கள் நலவாரியத்தில் பதிவு பெற்ற கலைஞர்கள் பயன்பெறும் வகையில், நபர் ஒருவருக்கு ரூ.10,000/- மதிப்பீட்டில், இசைக்கருவிகள் மற்றும் ஆடை ஆபரணங்கள் வாங்க 500 நாட்டுப்புறக் கலைஞர்களுக்கு ஆண்டுதோறும் தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தின்
மூலம் நிதியுதவி வழங்கப்படும் என்று 2021-22ஆம் ஆண்டிற்கான சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை மானியக் கோரிக்கையில்
அறிவிக்கப்பட்டது.