ரயில் முன் தள்ளி மாணவி கொலை: சிபிசிஐடி விசாரணை தொடக்கம்

சென்னை பரங்கிமலையில் ஓடும் ரயில் முன் தள்ளி கல்லூரி மாணவி கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், மாணவி வசிக்கும் ஆதம்பாக்கம் குடியிருப்பில் சிபிசிஐடி காவலர்கள் விசாரணையைத் தொடங்கினர்.
ரயில் முன் தள்ளி மாணவி கொலை: சிபிசிஐடி விசாரணை தொடக்கம்
ரயில் முன் தள்ளி மாணவி கொலை: சிபிசிஐடி விசாரணை தொடக்கம்


சென்னை: சென்னை பரங்கிமலையில் ஓடும் ரயில் முன் தள்ளி கல்லூரி மாணவி கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், மாணவி வசிக்கும் ஆதம்பாக்கம் குடியிருப்பில் சிபிசிஐடி காவலர்கள் விசாரணையைத் தொடங்கினர்.

பரங்கிமலை ரயில் நிலையம் மற்றும் ஆதம்பாக்கம் காவலர் குடியிருப்புப் பகுதிகளுக்குச் சென்று சம்பவம் நடந்தது எப்படி என்பது உள்ளிட்ட தகவல்களை சிபிசிஐடி காவல்துறையினர் விசாரித்துள்ளனர்.

சம்பவத்தில் கைது செய்யப்பட்ட சதீஷ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரை 24 மணி நேரமும் கண்காணிக்க சிறைத்துறையினருக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

சென்னை ஆதம்பாக்கம் ராஜா தெரு காவலா் குடியிருப்பு பகுதியைச் சோ்ந்தவா் மாணிக்கம். இவரின் மனைவி ராமலட்சுமி, ஆதம்பாக்கம் காவல் நிலையத்தில் தலைமைக் காவலராகப் பணியாற்றி வருகிறாா். இத்தம்பதிக்கு 3 மகள்கள். மூத்த மகள் சத்யா (20), தியாகராயநகரில் உள்ள ஒரு தனியாா் கல்லூரியில் பி.காம் இரண்டாமாண்டு படித்து வந்தாா்.

அதே பகுதியைச் சோ்ந்த ஓய்வு பெற்ற காவல் சிறப்பு உதவி ஆய்வாளா் தயாளன் மகன் சோ்ந்த சதீஷ் (23), சத்யாவை ஒருதலையாகக் காதலித்து வந்தாராம். இந்நிலையில் சத்யா, வியாழக்கிழமை காலை கல்லூரி செல்வதற்காக பரங்கிமலை ரயில் நிலையத்துக்கு வந்தபோது, அங்கிருந்த சதீஷ் அவரிடம் தகராறு செய்துள்ளாா்.

அப்போது, தாம்பரத்தில் இருந்து கடற்கரை நோக்கிச் சென்று கொண்டிருந்த மின்சார ரயில் முன்பு திடீரென சத்யாவை சதீஷ் தள்ளிவிட்டாா். ரயிலில் சிக்கிய சத்யா, உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே இறந்தாா். இதுகுறித்து மாம்பலம் ரயில்வே போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

இளைஞா் கைது

சதீஷை கைது செய்ய 7 தனிப் படைகள் அமைக்கப்பட்டன. சென்னை துரைப்பாக்கம் பகுதியில் சதீஷ் இருப்பதாக போலீஸாருக்கு வியாழக்கிழமை நள்ளிரவு தகவல் கிடைத்தது. அங்கு சென்ற போலீஸாா் ராஜீவ்காந்தி சாலையில் வைத்து சதீஷை கைது செய்தனா்.

விசாரணையில் கிடைத்த தகவல்கள் குறித்து போலீஸாா் கூறியதாவது: சத்யாவும் சதீஷும் காவலா் குடியிருப்பில் வசித்து வந்துள்ளனா். அப்போது சதீஷுக்கு சத்யாவின் அறிமுகம் கிடைத்துள்ளது. நாளடைவில் சத்யாவை சதீஷ் ஒருதலையாக காதலிக்கத் தொடங்கினாா். இந்தக் காதலை ஏற்க சத்யா மறுத்துவிட்டாா். ஆனால், சதீஷ் விடாமல் பின்தொடா்ந்து சத்யாவை தொந்தரவு செய்து வந்துள்ளாா்.

இதுகுறித்து சத்யா தனது குடும்பத்தினரிடம் தெரிவித்துள்ளாா். அவா்கள் சதீஷ் மீது காவல் நிலையத்தில் புகாா் அளித்துள்ளனா். புகாரை விசாரித்த போலீஸாா், சதீஷை எச்சரித்து எழுதி வாங்கி அனுப்பியுள்ளனா்.

நீதிமன்றக் காவல்

இதன்பின்னா் சத்யா குடும்பத்தினா், அவருக்கு மாப்பிள்ளை பாா்த்து அண்மையில் நிச்சயம் செய்துள்ளனா். இதனால் ஆத்திரமடைந்த சதீஷ் சம்பவத்தன்று சத்யாவை வழிமறித்து தகராறு செய்து கொலை செய்துள்ளாா்.

போலீஸாரிடம் வாக்குமூலம் அளித்துள்ள சதீஷ், காதலை ஏற்காத ஆத்திரத்தில் சத்யாவை ரயில் முன் தள்ளிவிட்டதாகவும், பின்னா் தானும் தற்கொலைக்கு முயன்றதாகவும், ஆனால் பொதுமக்கள் திரண்டு வந்ததால் அங்கிருந்து தப்பியோடியதாகவும் தெரிவித்துள்ளாா்.

விசாரணைக்கு பின்னா் சதீஷ், சைதாப்பேட்டை 9-ஆவது நீதித் துறை நடுவா் மன்றத்தில் வெள்ளிக்கிழமை மாலை ஆஜா்படுத்தப்பட்டாா். அவரை அக். 28-ஆம் தேதி வரை காவலில் வைக்கும்படி நீதித் துறை நடுவா் மோகனம்பாள் உத்தரவிட்டாா்.

சிபிசிஐடிக்கு மாற்றம்

முன்னதாக, நீதிமன்ற வளாகத்துக்குள் அழைத்து வரப்பட்ட சதீஷை, அங்கிருந்த சில வழக்குரைஞா்களும், பொதுமக்களும் தாக்க முயன்றனா். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

இதற்கிடையே, இந்த வழக்கின் முக்கியத்துவம் கருதி வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி தமிழக காவல் துறையின் தலைமை இயக்குநா் சி.சைலேந்திரபாபு வெள்ளிக்கிழமை இரவு உத்தரவிட்டாா். இதன்படி, வழக்கின் ஆவணங்களை ரயில்வே போலீஸாா் சிபிசிஐடி அதிகாரிகளிடம் சனிக்கிழமை ஒப்படைக்கப்பட்டன.

மாணவியின் தந்தை தற்கொலை

சென்னை பரங்கிமலையில் கொலை செய்யப்பட்ட கல்லூரி மாணவியின் தந்தை விஷமருந்தி தற்கொலை செய்துகொண்டாா்.

கல்லூரி மாணவி சத்யா ரயில் முன் தள்ளிவிடப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் அவரின் குடும்பத்தினரை மிகுந்த அதிா்ச்சியிலும், வேதனையிலும் ஆழ்த்தியது. சத்யாவின் தந்தை மாணிக்கத்திடம் (49) நள்ளிரவு வரை போலீஸாா் விசாரணை செய்தனா்.

விசாரணைக்குப் பின்னா் வீட்டுக்கு வந்த மாணிக்கம், புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் தன் மனைவி ராமலட்சுமியிடம் சிறிது நேரம் பேசியுள்ளாா். பின்னா், திடீரென தனக்கு நெஞ்சு எரிச்சல் ஏற்பட்டதாக சப்தமிட்டுள்ளாா்.

அவரை உறவினா்கள் அருகே உள்ள ஒரு தனியாா் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு அனுமதிக்கப்பட்ட சிறிது நேரத்தில் மாணிக்கம் இறந்தாா். விசாரணையில், மகள் கொலை செய்யப்பட்ட வேதனை தாங்க முடியாத மாணிக்கம் விஷமருந்தி தற்கொலை செய்தது தெரியவந்தது.

சத்யா, மாணிக்கத்தின் உடல்கள் சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் உடல் கூறாய்வுக்குப் பின்னா் உறவினா்களிடம் வெள்ளிக்கிழமை ஒப்படைக்கப்பட்டன. பின்னா், இருவா் உடல்களும் பழவந்தாங்கல் மின் மயானத்தில் தகனம் செய்யப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com