ரூ.500 கோடி மதிப்பீட்டில் 1,000 புதிய பேருந்துகள் வாங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சட்டப்பேரவையில் விதி 110-ன் கீழ் முதல்வர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினர். அதில் தெரிவித்திருப்பதாவது:
தமிழ்நாடு போக்குவரத்துக் கழகமானது கரோனா பெருந்தொற்று காலத்தில் அதிகமாக பாதிக்கப்பட்டது. பேருந்துகளில் பயணம் செய்யும் மக்களின் எண்ணிக்கை 2020-2021 காலத்தில் நாளொன்றுக்கு 70 லட்சமாகக் குறைந்தது. இதனால் போக்குவரத்துக் கழகங்களின் நிதிநிலை பாதிக்கப்பட்டது.
கரோனாவையும் கட்டுப்படுத்தி, போக்குவரத்து வசதியையும் கழக அரசு சீர் செய்த பிறகு, இப்போது நாளொன்றுக்கு ஒரு கோடியே 70 லட்சம் பேராக பயணிகளின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது.
அரசின் மிகச் சிறந்த சேவைத் திட்டமான மகளிருக்கு கட்டணமில்லா பேருந்து பயண வசதியின் மூலமாக மகளிர் நாளொன்றுக்கு சராசரியாக 44 லட்சம் பேர் பயணம் செய்து வருகிறார்கள். இதற்காக 7,105 சாதாரணக் கட்டண நகரப் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.
இந்தக் கட்டணமில்லாப் பேருந்துகளை அன்றாடம் வேலைக்குச் செல்லும் பெண்கள், சிறு வியாபாரம் செய்யக்கூடிய தாய்மார்கள் உள்ளிட்டோர் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.
இந்தப் புள்ளிவிவரங்களின் அடிப்படையில் பார்த்தால், இதுவரை சுமார் 2 ஆயிரம் கோடி ரூபாய் பணம் மகளிருக்கு சேமிப்பாக மாறியுள்ளது என்பதைப் பெருமையோடு குறிப்பிட விரும்புகிறேன். இதனை அரசு தனது வருமான இழப்பாகக் கருதவில்லை. மகளிர் மேம்பாட்டுக்கான வளர்ச்சித் திட்டமாகவே கருதுகிறது.
500 கோடி மதிப்பீட்டில் 1,000 புதிய பேருந்துகளை வாங்க அரசு முடிவெடுத்துள்ளது. அடிச்சட்டம் (Chassis) நல்ல நிலையில் உள்ள ஆயிரம் பழைய பேருந்துகளைப் புதுப்பித்திடவும் அறிவுறுத்தியிருப்பதாகவும், ஜெர்மன் வளர்ச்சி வங்கி நிதி உதவியோடு 2 ஆயிரத்து 213 டீசல் பேருந்துகளையும், 500 மின்சாரப் பேருந்துகளையும் வாங்கவும், உலக வங்கி உதவியோடு மேலும் ஆயிரம் பேருந்துகளை இயக்கிடவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.