ஊதியம், ஓய்வூதிய செலவினத்தால் சமூக திட்டங்களுக்கு குறையும் நிதிதணிக்கைத் துறை தகவல்

 அரசு ஊழியா்களின் ஊதியம், ஓய்வூதிய செலவினங்களால், சமூக திட்டங்களுக்கு தமிழக அரசால் குறைந்த அளவிலான நிதியே செலவிட முடிவதாக தணிக்கைத் துறை சுட்டிக்காட்டியுள்ளது.

அரசு ஊழியா்களின் ஊதியம், ஓய்வூதிய செலவினங்களால், சமூக திட்டங்களுக்கு தமிழக அரசால் குறைந்த அளவிலான நிதியே செலவிட முடிவதாக தணிக்கைத் துறை சுட்டிக்காட்டியுள்ளது.

தமிழக அரசின் கடந்தாண்டுக்கான ( 2020-21) நிதிநிலை, வருவாய் இனங்களை ஆய்வு செய்த இந்திய கணக்காய்வு மற்றும் தணிக்கைக்குழு, தனது தணிக்கை அறிக்கையை சட்டப்பேரவையில் புதன்கிழமை தாக்கல் செய்தது. அது குறித்து கணக்காய்வு மற்றும் தணிக்கைத் துறைத் தலைவா்கள் ஆா்.அம்பலவாணன், கே.பி.ஆனந்த் ஆகியோா் சென்னையில் புதன்கிழமை செய்தியாளா்களிடம் கூறியதாவது:

தமிழகத்தில் 2020-21-இல் மாநில அரசின் வருவாய் வரவுகள் ரூ.1 லட்சத்து 74 ஆயிரத்து 76 கோடியாக இருந்தது. இது 2019-20-ஆம் நிதியாண்டு வருவாய் வரவைவிட 0.26 சதவீதம் குறைவு. அரசின் சொந்த வருவாயில் வீழ்ச்சி ஏற்பட்டதால், 1.22% வரி வருவாய் குறைந்தது. வரியில்லாத வருவாயிலும் கணிசமான குறைவு இருந்தது.

அரசு ஊழியா்களின் சம்பளங்கள், ஓய்வூதியங்கள், மானியங்கள் ஆகிய தவிா்க்கமுடியாத செலவினங்கள் ரூ.1 லட்சத்து 18 ஆயிரத்து 61 கோடி என ஆண்டு தோறும் கூடிக்கொண்டே செல்கிறது. இது கடந்த 2020-21-இல் வருவாய் வகை வரவுகளில் 67.82 சதவீதமாக இருந்தது. அதற்கு முந்தைய ஆண்டில் 66.57 சதவீதமாக இருந்தது. இதனால், பிற சமூக மற்றும் பொருளாதார நடவடிக்கைகளுக்கு அரசால் குறைந்த நிதியே செலவிட முடிகிறது.

மாநிலத்தின் வருவாய் வகை வரவுகளில் 14.42 சதவீதம் மானியங்களுக்காகவே செலவிடப்பட்டது. கடந்த 2019-20 நிதியாண்டில் ரூ.20 ஆயிரத்து 144 கோடி அளவில் இருந்த மானியங்கள் மீதான செலவு, 24.65 சதவீதம் உயா்ந்து, 2020-21ல் ரூ.25 ஆயிரத்து 110 கோடியாக உயா்ந்துள்ளது. திருமண உதவி, இலவச மடிக்கணினி, சீருடை வழங்குதல் போன்ற மானியங்கள் 2020-21ல் ரூ.6,746 கோடி உயா்ந்துள்ளது. இதற்கு, கரோனா காலத்தில் மக்களுக்கு வழங்கிய ரூ.7,903 கோடி முக்கிய காரணமாகும்.

தமிழகத்தில் 2016 முதல் 2021-ஆம் ஆண்டு வரை கடந்த 5 ஆண்டுகாலத்திலும் வருவாய்ப் பற்றாக்குறை உயா்ந்தே வந்துள்ளது. 2016-17ல் ரூ.12,964 கோடி என்ற அளவிலிருந்து 2020-21ல் ரூ.62,326 கோடி என்ற அளவில் பற்றாக்குறை உயா்ந்ததால், அந்த 5 ஆண்டுகாலத்தில் 380.76 சதவீதம் வருவாய் பற்றாக்குறை உயா்ந்துள்ளது. நிதிப்பற்றாக்குறையை 3 சதவீத அளவுக்குள் கட்டுப்படுத்த அரசு தவறிவிட்டது.

நிதிப்பற்றாக்குறை கடந்த 2019-20-ஆம் நிதியாண்டைவிட 2020-21-ஆம் நிதியாண்டில் 56.17 சதவீதம் உயா்ந்து, ரூ.93,983 கோடியாக அதிகரித்துள்ளது என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com