திருவள்ளூர் அருகே நீர்நிலை ஆக்கிரமிப்பு வீடுகள் இடித்ததால், மாற்று இடம் வழங்கக்கோரி ரயில் தண்டவாளத்தில் தலை வைத்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
திருவள்ளூர்:திருவள்ளூர் அருகே திருவாலங்காடு ஊராட்சி ஒன்றியம் தொழுதாவூர் கிராமம். இப்பகுதியில் அரசு நடுநிலைப் பள்ளிக்கு எதிரே வெள்ளை குட்டை ஒன்று உள்ளது. இந்த வெள்ளை குட்டையின் அருகே உள்ள இடத்தை அதே கிராமத்தைச் சேர்ந்த கலைச்செல்வி, அருணோதயா, அருள்முருகன், உள்பட 7 பேர் குட்டை நீர்நிலையை ஆக்கிரமித்து 8 வீடுகள் ஒரு கடை உள்பட 9 கட்டடங்களைக் கட்டி உள்ளனர்.
அதனை அகற்றக் கோரி அதே கிராமத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் கடந்த 2019-ஆம் ஆண்டு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் உடனே ஆக்கிரமிப்புகளை அகற்றுமாறு வருவாய் துறையினருக்கு உத்தரவிட்டது. இதையடுத்து கடந்தாண்டு செப்டம்பர் மற்றும் டிசம்பரில் திருத்தணி வருவாய்த்துறையினர் இரு முறை ஆக்கிரமிப்புகளை அகற்றுமாறு நீர்நிலையில் குடியிருந்தவர்களிடம் நோட்டீஸ் அளித்தனர்.
இதையும் படிக்கலாம்: தகைசால் தமிழர் விருது: ஆர்.நல்லகண்ணு தேர்வு!
ஆக்கிரமிப்பாளர்கள் அருள்முருகன், ஷம்ஷத் பேகம் உள்பட நான்கு பேர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தனர். குடியிருப்பு நீர்நிலையாக இருப்பதாகக் கூறி கடந்த ஏப்ரல் மாதம் அந்த மனுவைத் தள்ளுபடி செய்தது. இதையடுத்து சனிக்கிழமை திருத்தணி கோட்டாட்சியர் அசரத்பேகம், வட்டாட்சியர் வெண்ணிலா ஆகியோர் தலைமையில் வருவாய் துறையினர் 3 ஜேசிபி இயந்திரத்தின் உதவியுடன் ஆக்கிரமிப்பு கட்டடங்களை அகற்றினர்.
நீர்நிலையை ஆக்கிரமித்து கட்டப்பட்ட வீடுகளில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டுத் துறையின் முதன்மை செயலாளர் அபூர்வா ஐஏஎஸ் அவர்களின் தாயார் வீடு, தொழுதாவூர் திமுக ஊராட்சி தலைவர் அருள் முருகன் வீடு, ரேஷன் கடை, ஊராட்சி மன்ற அலுவலகம், கிராம இ-சேவை மைய கட்டிடம் உள்ளிட்டவற்றையும் ஜேசிபி இயந்திரம் மூலம் இடித்துத் தள்ளினர்.
இந்நிலையில் ஐ.ஏ.எஸ் அதிகாரி அபூர்வா தாயார் வீட்டில் ஒரு வீட்டை மட்டும் இடித்து விட்டு மற்றவர்களின் வீட்டை இடித்து தரைமட்டம் ஆக்கியதால் கிராம மக்கள் தங்க இடமின்றி தவித்து வருவதால் மாற்று இடம் வழங்கக் கோரி திருவாலங்காடு ரயில் நிலையம் அருகே உள்ள ரயில் தண்டவாளத்தில் தலை வைத்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
இதனையடுத்து காவல் துறையினர் அவர்களை மீட்டு பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர். பல ஆண்டுகளாக வீடு கட்டி வாழ்ந்து வரும் நிலையில் திடீரென வீட்டை இடித்து தள்ளியதால் தங்குவதற்கு வழியின்றி தவிப்பதால் மாற்றிடும் வழங்கும் வரை செல்லமாட்டோம் எனப் பொதுமக்கள் தெரிவித்து வருவதால் காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.