தென்காசி மாவட்டம், கடையம் அருகே உள்ள வீரா சமுத்திரம் ஊராட்சிக்குள்பட்ட வாகைக்குளத்தை பல்லுயிர் பெருக்க மையமாக அறிவிக்கக் கோரிக்கை விடுத்துள்ளதையடுத்து வாகைக்குளத்தை மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
கடையம் ஊராட்சி ஒன்றியம் வாகைக்குளத்தில் ஆண்டுதோறும் செப்டம்பர் மாதம் முதல் ஜனவரி மாதம் வரை வெளிநாட்டுப் பறவைகள் உள்பட நூற்றுக்கும் மேற்பட்ட வகையான பறவைகளில் ஆயிரக்கணக்கான பறவைகள் கூடுகட்டி குஞ்சு பொறித்து செல்லும்.
திருநெல்வேலி மாவட்டத்தில் கூந்தன்குளத்தையடுத்து வாகைக்குளத்தில் தான் பறவைகள் கூடு கட்டி குஞ்சு பொறிப்பதற்கு வசதியாக அமைவிடம் உள்ளது. இதையடுத்து சுற்றுச்சூழல் ஆர்வலர்களும், பறவைகள் ஆராய்ச்சியாளர்களும் வாகைக்குளத்தை பல்லுயிர் பெருக்க மையமாக அறிவிக்கக் கோரிக்கை விடுத்து வந்தனர். இதையடுத்து வீரா சமுத்திரம் ஊராட்சியில் இது குறித்து சிறப்புத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதையும் படிக்க | ‘அதிமுகவின் நிரந்தரப் பொதுச் செயலர் ஜெயலலிதாதான்’: ஓபிஎஸ் அறிக்கை
இதையடுத்து தென்காசி மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் வாகைக்குளத்தைப் பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஆய்வின்போது குளத்தின் அளவு, வந்து செல்லும் பறவைகள், பயன் பெரும் பாசன நிலங்கள் குறித்து கேட்டறிந்தார். மேலும் வாகைக்குளத்திற்கு வரும் பறவைகளைப் பார்ப்பதற்கு வசதியாக பார்வை கோபுரம் அமைக்க உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.
அப்போது பறவைகளால் விவசாய நிலங்களில் பயிரிடப்படும் பயிர்கள் சேதமடைவதாகவும், குளத்தின் நீர்பறவை எச்சங்களால் மாசடைவதால் பொதுமக்கள் பயன்படுத்த முடியாத நிலை ஏற்படுவதாகவும் தெரிவித்தனர். அவர்களிடம் சூழல் அறிவியலாளர்களிடம் இது குறித்து கலந்தாலோசித்து முடிவு செய்யப்படும் என்று மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.
ஆய்வின்போது வீரா சமுத்திரம் ஊராட்சித் தலைவர் ஜீனத்பர்வின், உதவி வனப்பாதுகாவலர் (பயிற்சி) ராதை, வனச்சரகர் சரவணகுமார், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் ஸ்ரீபரமகல்யாணி சுற்றுச்சூழல் ஒப்புயர்வு மையத் தலைவர் செந்தில்நாதன், ஸ்ரீபரம கல்யாணி கல்லூரி விலங்கியல் துறைத் தலைவர் சுதாகரன், ஸ்ரீபரமகல்யாணி மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர் வெங்கடசுப்பிரமணியன், அகத்தியமலை மக்கள் சார் வளக் காப்புமைய ஒருங்கிணைப்பாளர் மகேஷ் மற்றும் பேராசிரியர்கள், விவசாயிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.