அதிமுகவில் இணைந்து செயல்பட எடப்பாடி பழனிசாமிக்கு, ஓ.பன்னீர்செல்வம் அழைப்பு விடுத்துள்ளார்.
ஓபிஎஸ் தொடர்ந்த வழக்கில், ஜூலை 11ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழுவும், பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்தெடுக்கப்பட்டது செல்லாது என்றும் சென்னை உயர்நீதிமன்றம் நேற்று தீர்ப்பளிக்கப்பட்டது.
இந்நிலையில், சென்னை இல்லத்தில் ஓ.பன்னீர்செல்வம் இன்று செய்தியாளர்களிடம் பேசியதாவது:
“அதிமுகவை மக்கள் இயக்கமாக எம்ஜிஆர் உருவாக்கினார். அதிமுகவை யாராலும் வெல்ல முடியாத இயக்கமாக ஜெயலலிதா மாற்றினார். 30 ஆண்டுகள் அதிமுகவை கட்டிக்காத்து பல்வேறு நலத்திட்டங்களை ஜெயலலிதா வழங்கினார்.
எங்களுக்குள் வந்த சில கருத்து வேறுபட்டால், அதிமுகவிற்குள் அசாதாரண சூழல் ஏற்பட்டுள்ளது. மனக்கசப்புகளை எல்லாம் மறந்து அதிமுகவின் நலனுக்காக அனைவரும் ஒன்றுபட வேண்டும் என்பதே எங்களின் நிலைப்பாடு.
மனக்கசப்புகளை தூக்கி எறிந்துவிட்டு அதிமுகவின் வெற்றியே பிரதானம் என செயல்படுவோம். ஒன்றுபட்டு ஜனநாயக ரீதியில் தேர்தலை சந்தித்தால், அதிமுகவை எந்தக் கட்சியாலும் வெல்ல முடியாது.” என்று தெரிவித்தார்.
பேட்டியின்போது, அடிக்கடி எடப்பாடி பழனிசாமியை அன்புச் சகோதரர் என்று ஓ.பன்னீர்செல்வம் குறிப்பிட்டு பேசினார்.
இதற்கிடையே, சென்னை உயர்நீதிமன்றத்தில் இரண்டு நீதிபதிகள் அமர்வு முன்பு எடப்பாடி பழனிசாமி தரப்பினர் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளனர்.