பண மோசடி: தலைமறைவாக இருந்த நிதி நிறுவன உரிமையாளர், மனைவி கைது

நிதி நிறுவனம் நடத்தி மோசடியில் ஈடுபட்டு தலைமறைவாக இருந்த சேலம் நிதி நிறுவன அதிபர் மற்றும் அவரது மனைவியை சென்னையில் கைது செய்த தனிப்படை போலீசார் அவர்களை சேலம் அழைத்து வந்தனர்.
நிதி நிறுவன மோசடியில் கைது செய்யப்பட்ட பாலசுப்பிரமணியன்.
நிதி நிறுவன மோசடியில் கைது செய்யப்பட்ட பாலசுப்பிரமணியன்.

சேலம்: நிதி நிறுவனம் நடத்தி மோசடியில் ஈடுபட்டு தலைமறைவாக இருந்த சேலம் நிதி நிறுவன அதிபர் மற்றும் அவரது மனைவியை சென்னையில் கைது செய்த தனிப்படை போலீசார் அவர்களை சேலம் அழைத்து வந்தனர். 

சேலம் ரெட்டிபட்டி பகுதியைச் சேர்ந்த பாலசுப்பிரமணியன் என்பவர் புதிய பேருந்து நிலையம் அருகே  'ஜஸ்ட்வின் ஐடி டெக்னாலஜி இந்தியா' என்ற நிறுவனம் நடத்தி வருகிறார். இந்த நிதி நிறுவனத்தில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் டெபாசிட் செய்திருந்தனர்.

இவர் 2019 முதல் தனது  நிறுவனத்தில், 1 லட்சம் ரூபாய் முதலீடு செய்தால் மாதம் 18,000 வீதம் ஒரு வருடத்தில் 2.16 லட்சம்  வழங்கப்படும் என்ற கவர்ச்சியான அறிவிப்பை வெளியிட்டு, சேலம் திருச்சி, கிருஷ்ணகிரி, வேலூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் ஆயிரக்கணக்கான உறுப்பினர்களை சேர்த்து இருந்தார்.

தொடக்கத்தில் பணம் முதலீடு செய்த உறுப்பினர்களுக்கு மாதம் தோறும் அவர் கூறியபடி அதிக வட்டியுடன் பணம் கொடுத்து இந்த கவர்ச்சி திட்டத்தை செயல்படுத்தி வந்துள்ளார். இதனையடுத்து ஆயிரக்கணக்கான நபர்கள் உறுப்பினராக இணைந்து முதலீடு செய்துள்ளனர். 

சமீப காலமாக பாலசுப்பிரமணியம் தனது உறுப்பினர்கள் யாருக்கும் பணத்தை வழங்கவில்லை என்று புகார் எழுந்தது. இந்த நிலையில்  வேலூர் மாவட்டத்தில் செயல்பட்டுவரும்  ஜஸ்ட்வின் ஐடி டெக்னாலஜி இந்தியா கிளையில் 3,500 க்கும் மேற்பட்டோர் ரூபாய் 40 கோடிக்கும் அதிகமான தொகையை முதலீடாக செலுத்தி உள்ளனர்.

மூன்று வருட காலமாக பாலசுப்ரமணியம் வேலூர் மாவட்டத்தில் இணைந்த உறுப்பினர்களுக்கும் தொகையை திருப்பிச் செலுத்தாமல் காலம் தாழ்த்தி வந்துள்ளார்.

இதையடுத்து மோசடியில் ஈடுபடும் பாலசுப்பிரமணியன் மீது வேலூர் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே வேலூரில் இருந்து பாலசுப்பிரமணியனிடம் பணம் கட்டி ஏமாற்றம் அடைந்த பலர் கடந்த 16 ஆம் தேதி  சேலம் வந்தனர். பின்னர் இவர்கள் பாலசுப்பிரமணியனை பிடித்துக் கொண்டனர். பாலசுப்பிரமணியனை போலீசில் ஒப்படைக்க சென்றபோது அடியாட்கள் வந்து மிரட்டி முதலீடு செய்தவர்களை கடுமையாகத் தாக்கி பாலசுப்ரமணியனை அழைத்துச் சென்று விட்டனர் .

இது குறித்து சேலம் அழகாபுரம் காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. இதனையடுத்து சேலம் மாநகர காவல் ஆணையாளர் நஜ்முல் ஹோடா தனிப்படை அமைத்து தீவிர விசாரணை செய்து வந்தனர். இந்த நிலையில் நேற்று நள்ளிரவு பாலசுப்பிரமணியன் மற்றும் அவரது மனைவி தனலட்சுமி ஆகியோர் சென்னையில் கைது செய்யப்பட்டனர். பின்னர் இருவரும் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சேலம் அழைத்து வரப்பட்டனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com