மேட்டூர்: காவிரியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
வெள்ளப்பெருக்கு காரணமாக வெள்ளிக்கிழமை மாலை மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 60,000 கன அடியாக அதிகரித்துள்ளது.
மேட்டூர் அணை நிரம்பிய நிலையில் இருப்பதால் அணைக்கு வரும் நீர் முழுமையாக வெளியேற்றப்பட்டு வருகிறது.
வினாடிக்கு 60,000 கன அடி வீதம் மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படுகிறது. இதனால், காவிரி கரையோரப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்கும் படி மேட்டூர் நீர்வளத்துறை உதவி செயற்பொறியாளர் செல்வராஜ் எச்சரித்துள்ளார்.
மேலும், மேட்டூர் அணைக்கு கீழ்ப் பகுதியில் உள்ள ஈரோடு, நாமக்கல், கரூர், அரியலூர், திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், கடலூர் உள்ளிட்ட காவிரி டெல்டா மாவட்ட ஆட்சியர்கள், காவிரி கரையோரங்களில் வசிக்கும் மக்களின் உயிர் மற்றும் உடமைகளை பாதுகாக்கவும் அனைத்து பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
இன்று காலை மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 60,000 கன அடியாக அதிகரித்துள்ளது. அணையில் இருந்து வினாடிக்கு 60,000 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
அணை மின் நிலையம் மற்றும் சுரங்க மின் நிலையங்கள் வழியாக வினாடிக்கு 23,000 கன அடி நீரும் உபரி நீர் போக்கியான 16 கண் பாலம் வழியாக வினாடிக்கு 37,000 கன அடி நீரும் திறக்கப்பட்டு வருகிறது.
கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 400 கன அடி நீர்தான் தண்ணீர் திறக்கப்படுகிறது. அணையின் நீர்மட்டம் 120 அடியாகவும், நீர் இருப்பு 43.47 டிஎம்சியாகவும் உள்ளது. மழையளவு 40.20 மிமீ.
இதையும் படிக்க | சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் தீ விபத்து