சென்னை திருவான்மியூர் பகுதிகளில் புயல் பாதித்த பகுதிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
வங்கக்கடலில் உருவான மாண்டஸ் புயல் இன்று(சனிக்கிழமை) அதிகாலை 3 மணியளவில் மாமல்லபுரம் அருகே கரையைக் கடந்தது. புயலையொட்டி நேற்று முதலே சென்னையில் உள்ளிட்ட வட மாவட்டங்களில் சூறைக்காற்றுடன் கனமழை பெய்தது. இதனால் மரங்கள் முறிந்து விழுந்தன. பல பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.
இந்நிலையில், சென்னையில் புயல் பாதித்த பகுதிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று பார்வையிட்டார்.
சென்னை திருவான்மியூர் கொட்டிவாக்கம், பாலவாக்கம், ஈஞ்சம்பாக்கம் பகுதிகளில் ஆய்வு மேற்கொண்ட அவர், மக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். மேலும் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணப் பொருள்களை வழங்கினார்.
அமைச்சர்கள் கே.என்.நேரு, மா.சுப்பிரமணியன், மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி ஆகியோர் உடனிருந்தனர்.