பிறந்த குழந்தை சில மணி நேரங்களிலேயே உயிரிழப்பு: சீர்காழி அரசு மருத்துவமனையில் பரபரப்பு!

சீர்காழி அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தை சில மணி நேரங்களிலேயே உயிரிழப்பு.  செவிலியர்கள் காலதாமதமாக சிகிச்சை அளித்ததால் குழந்தை இறந்ததாக  பெற்றோர், உறவினர்கள் புகார் தெரிவித்துள்ளனர். 
பிறந்த குழந்தை சில மணி நேரங்களிலேயே உயிரிழப்பு: சீர்காழி அரசு மருத்துவமனையில் பரபரப்பு!

சீர்காழி அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தை சில மணி நேரங்களிலேயே உயிரிழப்பு.  செவிலியர்கள் காலதாமதமாக சிகிச்சை அளித்ததால் குழந்தை இறந்ததாக  பெற்றோர், உறவினர்கள் புகார் தெரிவித்துள்ளனர். 

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுகா புளியந்துறை கிராமத்தைச் சேர்ந்தவர் பாண்டியன் (35.) விவசாயியான இவருக்கு கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் ஆகி ரம்யா (26) என்ற மனைவியும், ஒரு ஆண் குழந்தையும் உள்ளனர். 2வது முறையாக கர்ப்பமான ரம்யாவிற்கு இன்று பிரசவவலி  ஏற்பட்டதால் உறவினர்கள் அவரை சீர்காழி அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்து சேர்த்தனர். நேற்று காலை 11 மணி அளவில் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட ரம்யாவிற்கு மாலை ஆண் குழந்தை பிறந்துள்ளது. குழந்தைக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டதாக கூறி தாயையும், சேயையும் மருத்துவமனை செவிலியர்கள் மேல் சிகிச்சைக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்துள்ளனர். அங்கு குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தை ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த அக்குழந்தையின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் மருத்துவர் இன்றி காலதாமதமாக செவிலியர்கள் பிரசவம் பார்த்ததாலேயே குழந்தை இறந்ததாக குற்றம் சாட்டி  இறந்த குழந்தையின் உடலை கையில் ஏந்தியவாறு நள்ளிரவு வரை தலைமை மருத்துவர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

தகவல் அறிந்து வந்த சீர்காழி காவல் துணை கண்காணிப்பாளர் லாமேக் தலைமையிலான காவல்துறையினர், அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் பானுமதி முன்னிலையில் குழந்தையின் பெற்றோர் மற்றும் உறவினர்களிடம் பேச்சுவார்த்தை  நடத்தினர். அப்போது பிரசவம் நடந்த போது பணியில் இருந்த மருத்துவர் மற்றும் செவிலியர்களிடம் உரிய விசாரணை நடத்தி அதன் அடிப்படையில் துறை ரீதியான நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதனை அடுத்து இறந்த குழந்தையின் உடல் மருத்துவமனை சவக்கிடங்கில்  வைக்கப்பட்டது. இச்சம்பவம் அரசு மருத்துவமனையில்  பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com