நடிகரும், சமத்துவ மக்கள் கட்சித் தலைவருமான சரத்குமாருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அவர் மருத்துவர்கள் அறிவுரையின்படி தனிமைப்படுத்திக்கொண்டுள்ளார்.
நாடு முழுவதும் கரோனா 3-வது அலை வேகமாக பரவி வருகிறது. உருமாறிய ஒமைக்ரான் தொற்றாலும் பலர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். திரைப்பிரபலங்கள், அரசியல் பிரமுகர்கள் என பலரும் கரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
அந்தவகையில் நடிகரும், சமத்துவ மக்கள் கட்சித் தலைவருமான சரத்குமாருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பாக தமது சுட்டுரைப் பதிவில் அவர் உறுதிப்படுத்தியுள்ளார். கடந்த இரண்டு நாள்களாக அறிகுறிகள் இருந்ததால், கரோனா பரிசோதனை செய்துகொண்டதாகவும், அதில் கரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார். இதனால் மருத்துவர்கள் அறிவுரையின்படி தனிமைப்படுத்திக்கொண்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், தன்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் பரிசோதனை செய்துகொண்டு தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும் என்றும் சரத்குமார் கேட்டுக்கொண்டுள்ளார்.