நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு சென்னையில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் நாளை பிரசாரம் மேற்கொள்கிறார்.
தமிழகத்தில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 490 பேரூராட்சிகள் என 649 நகா்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் காலியாக உள்ள 12,838 பிரதிநிதிகளுக்கான தோ்தல் பிப்ரவரி 19- ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதற்கான வேட்புமனுத் தாக்கல் கடந்த ஜனவரி 28-ஆம் தேதி தொடங்கி நேற்றுடன் நிறைவடைந்தது. வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை இன்று நடைபெற்றது.
பிப்.7ஆம் தேதி வேட்புமனுக்களை திரும்ப பெற கடைசி நாள். தேர்தலில் பதிவான வாக்குகள் பிப்ரவரி 22ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன. இந்த நிலையில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் தலைவர் சார்பில் சென்னையில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரத்து அதன் தலைவர் கமல்ஹாசன் நாளை பிரசாரம் மேற்கொள்கிறார்.
இதையும் படிக்க- ராமானுஜர் சிலையை திறந்து வைத்தார் பிரதமர் மோடி
இதுகுறித்து அக்கட்சி வெளியிட்ட அறிக்கையில், நாளை காலை 11 மணியளவில் நமது மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் விசாலாட்சி தோட்டம் பகுதியில்(மந்தைவெளி பறக்கும் ரயில் நிலையம் அருகில்) நடக்கவிருக்கும் மாநகராட்சித் தேர்தலில் போட்டியிடும் நமது கட்சி வேட்பாளருக்கான மக்களிடம் வாக்கு சேகரிக்கவிருக்கிறார் என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்.
தொடர்ந்து மதியம் 2 மணியளவில் சென்னை மாநகராட்சியில் போட்டியிடும் நமது கட்சியின் அனைத்து வேட்பாளர்களையும் கட்சியின் தலைமை அலுவலகத்தில் சந்திக்கிறார். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.