தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி திடீர் பயணமாக இன்று காலை தில்லி புறப்பட்டுச் சென்றார்.
தமிழகத்திற்கு மருத்துவப் படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்விலிருந்து விலக்கு அளிக்கக் கோரி மாநில சட்டப்பேரவையில் மசோதா நிறைவேற்றப்பட்டு கடந்த ஆண்டு ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இந்த மசோதாவை நிராகரித்து தமிழக சட்டப்பேரவைக்கே ஆளுநர் திருப்பி அனுப்பியதுடன் மசோதா உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக உள்ளதாக விளக்கமளித்தார். இது தமிழக அரசியல் சூழலில் பரபரப்பைக் கிளப்பியது.
இதையும் படிக்க | வலிமை திரைப்படக் காட்சிகளை நீக்கிய படக்குழு
அதனைத் தொடர்ந்து கூடிய சிறப்பு சட்டப்பேரவைக் கூட்டத்தில் மீண்டும் நீட் தேர்வுக்கு எதிராக மசோதா நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இந்த சூழலில் கடந்த பிப்ரவரி 7ஆம் தேதி தில்லி செல்வதாக இருந்த ஆளுநர் ஆர்.என்.ரவியின் பயணம் இறுதி நேரத்தில் ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில் இன்று காலை திடீர் அவசரப் பயணமாக ஆளுநர் தில்லி புறப்பட்டு சென்றார். ஆளுநரின் இந்த தில்லி பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.