விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகேவுள்ள மஞ்சள் ஓடைப்பட்டி பகுதியில் உள்ள பட்டாசு ஆலையில் புதன்கிழமை (ஜன.5) காலையில் வெடி விபத்து ஏற்பட்டது.
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே விஜயகரிசல்குளம் பகுதியைச் சேர்ந்த கருப்பசாமி என்பவருக்கு சொந்தமான பட்டாசு தொழிற்சாலை மஞ்சள் ஓடைப்பட்டி கிராமத்தில் செயல்பட்டு வருகிறது.
இந்த பட்டாசு தொழிற்சாலையில் ஆறு அறைகளில் பட்டாசு தயாரிக்கும் பணி நடைபெற்றது. இந்த நிலையில் இன்று காலை வழக்கம் போல் பட்டாசு தயாரிக்கும் பணியில் 15க்கும் மேற்பட்ட பட்டாசு தொழிலாளர்கள் ஈடுபட்டு வந்தனர்.
அப்போது ஆலை உரிமையாளர் கருப்பசாமி செந்தில் ஆகிய இருவரும் பட்டாசுக்கு தேவையான மருந்துகள் கலக்கும் பணியில் ஈடுபட்ட போது உராய்வின் காரணமாக இந்த விபத்து ஏற்பட்டு ஒரு அறை தரைமட்டமானது.
இந்த வெடிவிபத்தில் பட்டாசு தயாரிக்கும் பணியில் ஈடுபட்ட மஞ்சள்ஒடைபட்டியை சேர்ந்த முனியசாமி கண்ணகுடும்பன் பட்டியைச் சேர்ந்த காசி கொம்மிங்காபுரத்தை சேர்ந்த பெருமாள் சரஸ்வதி அய்யம்மாள், விஜயகரிசல்குளத்தை சேர்ந்த செந்தில், கருப்பசாமி உள்ளிட்ட 7 பேரும் படுகாயம் அடைந்தனர்.
இதையடுத்து தகவலறிந்த சாத்தூர் வெம்பக்கோட்டை சிவகாசி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த தீயணைப்புத் துறையினர் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டு வந்தனர்.
இதையடுத்து இந்த விபத்தில் காயமடைந்தவர்கள். சாத்தூர் மற்றும் கோவில்பட்டி அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கோவில்பட்டி அரசு மருத்துவ மனையில் செந்தில் மற்றும் கருப்பசாமி ஆகிய இருவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். மேலும் சாத்தூர் அரசு மருத்துவ மனையில் காசி என்பவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மேலும் 2 பெண்கள் உட்பட 4 பேர் சாத்தூர் மற்றும் கோவில்பட்டி அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த சம்பவம் குறித்து ஏழாயிரம்பண்ணை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.