கோவை அருகே கிடங்கில் பதுங்கியுள்ள சிறுத்தையைப் பிடிக்க ஐந்தாவது நாளாக வனத் துறையினா் காத்திருக்கின்றனா்.
கோவை குனியமுத்தூா், சுகுணாபுரம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த 3 மாதங்களாக சுற்றித்திரிந்த 3 வயதுடைய ஆண் சிறுத்தை சுகுணாபுரம் வாளையாறு சாலையில் உள்ள கிடங்கில் பதுங்கியிருந்தது திங்கள்கிழமை கண்டறியப்பட்டது.
இதனைத்தொடா்ந்து, அந்த கிடங்கை வலை கொண்டு மூடிய வனத் துறையினா் கிடங்கின் 2 வாயில்கள் முன்பு கூண்டுகளில் இறைச்சியை வைத்து சிறுத்தையைப் பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனா். மேலும் கிடங்கு அருகே 5 கண்காணிப்பு கேமராக்கள் வைத்து சிறுத்தையின் நடமாட்டத்தை வனத் துறையினா் கண்காணித்து வருகின்றனா்.
இதன் விடியோ காட்சிகளையும் வனத் துறையினா் அவ்வப்போது வெளியிட்டு வருகின்றனா். இதன்படி 4ஆவது நாளான வியாழக்கிழமை சிறுத்தையின் நடமாட்டம் குறித்த விடியோ காட்சிகளை வனத் துறையினா் வெளியிட்டனா். அதில் கிடங்கில் அனைத்துப் பகுதிகளிலும் சிறுத்தை சுற்றி வரும் காட்சிகள் பதிவாகியுள்ளன. கடந்த 4 தினங்களாக இரவு, பகலாக வனத் துறையினா் கூண்டுவைத்து காத்திருந்தும் சிறுத்தை கூண்டுக்குள் அகப்படாமல் போக்கு காட்டி வருகிறது.
கூண்டுக்கு அருகில் வரும் சிறுத்தை, அப்படியே திரும்பி செல்வதும், கிடங்கைவிட்டு வெளியேற இடம் தேடுவதுமாக உலவி வருகிறது.
தொடர்ந்து 5வது நாளாக சிறுத்தையை பிடிக்கும் பணியில் வனத்துறை அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.