எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் நாளை விசாரணைக்கு வரவிருந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கிற்கு உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது.
கடந்த ஜூன் 23 ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் ஓபிஎஸ் ஒப்புதல் அளித்த 23 தீர்மானங்கள் தவிர வேறு தீர்மானங்கள் எதுவும் நிறைவேற்றக்கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
ஆனால், பொதுக்குழுவில் நீதிமன்ற உத்தரவை பொதுக்குழு மீறிவிட்டதாக ஓபிஎஸ் தரப்பு ஆதரவாளர் சண்முகம், எடப்பாடி பழனிசாமி மீது சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நாளை விசாரணைக்கு வரவிருந்த நிலையில் அதற்கு இடைக்காலத் தடை விதித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
முன்னதாக, 23 தீர்மானங்கள் தவிர வேறு தீர்மானங்கள் எதுவும் நிறைவேற்றக்கூடாது என்ற சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை எதிா்த்து எடப்பாடி கே. பழனிசாமி தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை உச்சநீதிமன்றத்தில் இன்று நடைபெற்றது. மேல்முறையீட்டு வழக்கில், 'அதிமுக உள்கட்சி விவகாரத்தில் உச்சநீதிமன்றம் தலையிட முடியாது. பொதுக்குழுவுக்கு நாங்கள் தடை விதிக்க முடியாது. சென்னை உயர்நீதிமன்ற ஒருநபர் அமர்வுதான் இதுகுறித்து முடிவெடுக்க வேண்டும். முன்னதாக இரு நபர் அமர்வின் உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதிக்கப்படுகிறது' என்று உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. இந்த வழக்கின்போது எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு வழக்கிற்கும் உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.
இதையும் படிக்க | அதிமுக பொதுக்குழுவுக்குத் தடையில்லை: உச்சநீதிமன்றம்