கூத்தாநல்லூர்: திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூரில் அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியை, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொளி மூலம் வியாழக்கிழமை திறந்து வைத்தார்.
கூத்தாநல்லூர் நகராட்சிக்குட்பட்ட, ஜாமியாத் தொடக்கப் பள்ளியில், அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் திறப்பு விழா நிகழ்விற்கு, சட்டப்பேரவை உறுப்பினர் பூண்டி கே.கலைவாணன் தலைமை வகித்தார். மாவட்ட வருவாய் அலுவலர் ப.சிதம்பரம், மாவட்ட ஊராட்சித் தலைவர் கோ.பாலசுப்ரமணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முதல்வர் மாறன் வரவேற்றார்.
5 பாடப் பிரிவுகளுடன் இக்கல்லூரி, நடப்பு கல்வியாண்டில் செயல்பட உள்ளது. தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் காணொளி வாயிலாக திறந்து வைத்தப்பிறகு, கூத்தாநல்லூர் அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், குத்து விளக்கேற்றி, கேக் வெட்டப்பட்டன.
விழாவில், கோட்டாட்சியர் கீர்த்தனா மணி, நகர மன்றத் தலைவர் மு.பாத்திமா பஷீரா, துணைத் தலைவர் மு.சுதர்ஸன், பெரியப் பள்ளி வாயில் ஜமாஅத் நிர்வாகிகள், நகர மன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை, நகரச் செயலாளர் எஸ்.வி. பக்கிரிசாமி மற்றும் நகர நிர்வாகிகள் கவனித்தனர்.