கடலூர் மாவட்டம் பெரிய நெசலூர் கிராமத்தில் கள்ளக்குறிச்சி மாணவியின் இறுதி ஊர்வலம் தொடங்கியது.
கள்ளக்குறிச்சி மாவட்டம், கனியாமூா் தனியாா் பள்ளியில் மர்மமான முறையில் இறந்ததாகக் கூறப்படும் மாணவியின் உடல், நீதிமன்ற உத்தரவுப்படி இன்று காலை அவரது பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.
கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லூரி, மருத்துவமனையில் இருந்து மாணவியின் உடல், கடலூர் மாவட்டம் பெரிய நெசலூர் கிராமத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. அமைச்சர் சி.வி.கணேசன், எம்எல்ஏக்களும் உடன் சென்றனர்.
முன்னதாக, அமைச்சர் சி.வி. கணேசன், எம்எல்ஏக்கள் உதயசூரியன், வசந்தம் கார்த்திகேயன் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் ஆகியோர் மாணவியின் உடலுக்கு மாலை அணிவித்து இறுதி அஞ்சலி செலுத்தினர்.
மாணவியின் உடல் இறுதி அஞ்சலிக்கு அவரது வீட்டில் வைக்கப்பட்டு தற்போது இறுதிச் சடங்கு ஊர்வலம் தொடங்கியுள்ளது. இதில், மாணவியின் உறவினர்கள், உள்ளூர் மக்கள் கலந்துகொண்டுள்ளனர்.
மாணவியின் இறுதிச்சடங்கையொட்டி அசம்பாவிதம் ஏதும் நடக்காமல் இருக்க, கள்ளக்குறிச்சி, கடலூர் மாவட்டங்களில் குறிப்பாக பெரியநெசலூர் கிராமத்தில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். நான்கு அடுக்கு சோதனைச் சாவடி, இறுதிச் சடங்கில் கிராம மக்களுக்கு மட்டுமே அனுமதி என பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.