தமிழகத்தில் சுமார் 25 நாள்களுக்குப் பிறகு, நாள்தோறும் கரோனா உறுதி செய்யப்படுவோரின் எண்ணிக்கை இரண்டாயிரத்துக்குள் குறைந்திருக்கிறது. ஆனால் கரோனா பாதிப்பு கோவையில் ஏறுமுகமாகவே உள்ளதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
தமிழகத்தில் தற்போது கரோனா சிகிச்சையில் 15,409 போ் உள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை தெரிவித்துள்ளது.
அதேபோன்று ஞாயிற்றுக்கிழமை புதிதாக தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 1,945-ஆக உள்ளது. தமிழகத்தில் 25 நாள்களுக்குப் பிறகு நேற்று முதல் முறையாக இரண்டாயிரத்துக்கும் குறைவாக கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையிலும் கரோனா பாதிப்பு குறைந்துள்ளது. இதன் மூலம் நாள்தோறும் படிப்படியாக கரோனா நோயாளிகளின் எண்ணிக்கையும் குறைந்து வருகிறது.
அதன்படி,
24ஜூலை: 419
23ஜூலை: 431
22ஜூலை: 466
21ஜூலை: 516
20ஜூலை: 528
19ஜூலை: 561
18ஜூலை: 575
17ஜூலை: 596
16ஜூலை: 607 என்கிறது புள்ளிவிவரம்.
நேற்று அதிகபட்சமாக சென்னையில் 419 பேருக்கும், செங்கல்பட்டில் 207 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஞாயிற்றுக்கிழமை தகவல்படி 2,379 போ் குணமடைந்துள்ளனா். இதன் மூலம் கரோனாவிலிருந்து விடுபட்டோரின் எண்ணிக்கை 34,78,902-ஆக உயா்ந்துள்ளது.
ஆனால், கோவையில் ஜூலை 9ஆம் தேதி முதல் கரோனா பாதிப்பு அதிகரித்தே வருகிறது. வெள்ளிக்கிழமை அதிகபட்சமாக 187 பேருக்கு உறுதி செய்யப்பட்டது. கடந்த ஒரு வாரமாக நாள்தோறும் 150 முதல் 200 பேர் வரை கரோனாவால் பாதிக்கப்படுகிறார்கள். அங்கு கரோனா உறுதியாகும் விகிதம் 9.5 சதவீதமாக உள்ளது.
அது மட்டுமல்லாமல், கோவையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் கரோனா நோயாளிகளின் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்து வருவதாகவும், கரோனா கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை மக்கள் கைவிட வேண்டாம் என்றும் சுகாதாரத்துறை கேட்டுக் கொண்டுள்ளது.
தமிழகத்தில் தற்போது கரோனா பாதித்து சிகிச்சையில் இருக்கும் 15,409 பேரில், மூன்றில் ஒரு பங்கு சென்னையை (5,043) சேர்ந்தவர்கள். எனினும், அங்கு ஜூலை 4ஆம் தேதி புதிய கரோனா பாதிப்பு 1,072 ஆக இருந்த நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை 419 ஆகக் குறைந்துள்ளது. எனவே மக்கள் இதுவரை பின்பற்றி வந்த கட்டுப்பாடுகளை தொடர்ந்து பின்பற்றி வந்தால் தமிழகத்தில் கரோனா பாதிப்பு கட்டுக்குள் கொண்டு வரப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.