திருவள்ளூர்: திருவள்ளூர் அருகே பள்ளி விடுதியில் தூக்கிட்டு உயிரிழந்த பிளஸ் 2 மாணவியின் சடலம் உடல் கூறாய்வுக்கு பின் செவ்வாய்க்கிழமை பிற்பகல் உறவினர்களிடம் ஒப்படைத்ததை தொடர்ந்து, பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சொந்தக் கிராமத்திற்கு அடக்கம் செய்ய கொண்டு சென்றனர்.
திருவள்ளூர் மாவட்டம், கடம்பத்தூர் ஒன்றியம், கீழச்சேரி ஊராட்சியில் அரசு உதவி பெறும் தனியார் மகளிர் மேல்நிலைப் பள்ளி உள்ளது. இங்கு திருத்தணியை அடுத்த தெக்களூர் கிராமத்தைச் சேர்ந்த பூஷணம்-முருகம்மாள் தம்பதியின் மகள் சரளா (17) விடுதியில் தங்கி பிளஸ் 2 படித்து வந்தார். இந்த நிலையில் திங்கள்கிழமை காலை விடுதி அறையில் சரளா தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டாராம். இதைத் தொடர்ந்து திருவள்ளூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் உடல் கூறாய்வுக்காக வைக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் செவ்வாய்க்கிழமை காலையில் விடியோ பதிவுடன் மருத்துவக்குழுக்களால் உடல் கூறாய்வு மேற்கொள்ளப்பட்டது. பின்னர் மாணவியின் சடலத்தை உறவினர்கள் வாங்க மறுத்தனர். அதையடுத்து காஞ்சிபுரம் சரக டி.ஐ.ஜி எம்.சத்தியபிரியா, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பி.சீபாஸ் கல்யாண், சார் ஆட்சியர் மகாபாரதி, காவல் துணைக்கண்காணிப்பாளர்கள் துரைப்பாண்டியன், சந்திரதாசன், சட்டப்பேரவை உறுப்பினர்கள் வி.ஜி.ராஜேந்திரன் (திருவள்ளூர்), சந்திரன்(திருத்தணி) உள்ளிட்டோர் மாணவியின் சகோதரர் சரவணன் மற்றும் உறவினர்களிடம் தொடர்ந்து 3 மணிநேரம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது, மாணவியின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசுப் பணி வழங்கவும், சிபிசிஐடி விசாரணை அறிக்கையை எங்கள் முன்பு வெளியிடவும் கோரிக்கை வைத்தனர். அதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதி அளித்தனர்.
அதைத்தொடர்ந்து மாணவியின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பதைத் தொடர்ந்து பலத்த காவல்துறை பாதுகாப்புடன் திருத்தணி அருகே உள்ள தெக்களூர் கிராமத்திற்கு அடக்கம் செய்வதற்காக கொண்டு செல்லப்பட்டது.