செஸ் ஒலிம்பியாட் விளம்பரப் பலகையில் ஒட்டப்பட்ட பிரதமர் மோடியின் ஸ்டிக்கர் மீது கருப்பு மையிட்டு அழிக்கும் விடியோ சமூக வலைத்தளத்தில் பரவி வருகிறது.
44-வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி நாளை (ஜூலை 28) தொடங்கி ஆகஸ்ட் 10 ஆம் தேதி வரை வரலாற்று சிறப்புமிக்க மாமல்லபுரத்தில் நடைபெற உள்ளது. 180க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து சுமார் 2,000-க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் இதில் கலந்துகொள்ளவிருக்கின்றனர். இதையொட்டி தமிழக அரசு சார்பில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
இதையும் படிக்க | இந்தியாவில் நடைபெறும் மகளிர் ஒருநாள் உலகக் கோப்பைப் போட்டி
இந்நிலையில் செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடர்பான விளம்பரங்களில் பிரதமர் நரேந்திரமோடியின் புகைப்படங்கள் இடம்பெறவில்லை எனக் கூறி பாஜகவினர் குற்றச்சாட்டு எழுப்பி வருகின்றனர்.
அதன் ஒருபகுதியாக பாஜக நிர்வாகி அமர் பிரசாத் ரெட்டி சென்னையில் உள்ள செஸ் ஒலிம்பியாட் விளம்பரப் பலகையில் பிரதமர் மோடியின் ஸ்டிக்கரை ஒட்டி விடியோ வெளியிட்டிருந்தார். அதில், “செஸ் ஒலிம்பியாட் திமுக நிகழ்ச்சி கிடையாது. இது அரசு நிகழ்ச்சி. இதில் பிரதமரின் படத்தை இடம்பெற செய்யாதது குற்றம்” எனத் தெரிவித்திருந்தார்.
இதையும் படிக்க | 39 முறை தோல்வி! 40வது முயற்சியில் பணி வழங்கிய கூகுள்: வெற்றிக் கதை!
இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் தந்தை பெரியார் திராவிட கழகத்தைச் சேர்ந்த பிரமுகர் ஒருவர் செஸ் ஒலிம்பியாட் விளம்பரப் பலகையில் ஒட்டப்பட்டிருந்த பிரதமர் மோடியின் ஸ்டிக்கர் மீது கருப்பு மையிட்டு அழித்தார். இந்த விடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வேகமாகப் பரவி வருகிறது.