
நெல்லையில் மணல் வியாபாரி மர்ம நபர்களால் வெட்டிக் கொலை செய்தனர். உடலை கைப்பற்றி காவல் துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
நெல்லை மாவட்டம், நாங்குநேரி அருகே உள்ள மஞ்சங்குளத்தை சேர்ந்தவர் சுந்தரபாண்டி மகன் சாமித்துரை (23). இவர் மீது நாங்குநேரி போலீசில் மணல் கடத்தல் வழக்குகள் நிலுவையில் உள்ளன.
இதுதொடர்பாக அவர் 2 முறை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, பின்னர் விடுவிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், வியாழக்கிழமை நள்ளிரவு சாமித்துரை வீட்டு முன்புள்ள பஸ் நிறுத்தத்தில் நின்று கொண்டு செல்போனில் பேசிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த மர்ம நபர்கள் திடீர் என சாமித்துரையை அரிவாள்களால் சரமாரியாக வெட்டினர். இதனால் அவர் அலறினார். அவரது அலறல் சத்தத்தை கேட்டு அவரது தந்தை மற்றும் உறவினர்கள் ஒடி வந்தனர்.
ஆனால், அதற்குள் மர்ம நபர்கள் தப்பி ஓடிவிட்டனர். அரிவாள் வெட்டுகளால் படுகாயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் சரிந்த சாமித்துரை சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதையும் படிக்க | தமிழக கல்வி வளர்ச்சிக்கு பிரதமர் உதவ வேண்டும்: அமைச்சர் பொன்முடி கோரிக்கை
இதுகுறித்து நாங்குநேரி போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து உடலை கைப்பற்றி உடல் கூறாய்வுக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
சாமித்துரையை கொலை செய்த கும்பல் யார் என்று போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடந்த 4 ஆண்டுகளுக்கு முன் சாமித்துரையின் சகோதரர் சுப்பையா என்பவரும் இதே போல் வெட்டி படுகொலை செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
கொலை செய்யப்பட்ட சாமித்துரைக்கு திருமணம் நிச்சயம் செய்யப்பட்டுள்ளது. அந்த பெண்ணுடன் தான் அவர் நேற்று நள்ளிரவில் செல்போனில் பேசிக் கொண்டிருக்கும் போது படுகொலை செய்யப்பட்டுள்ளார்.