வாணியம்பாடி அருகே மனைவி பிரிந்து வெளிநாடு சென்றதால் மனைவியின் சகோதரியை வசிய மருந்து ஊற்றி காதல் வலையில் சிக்க வைக்க முயன்றவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த பூங்குளம் பகுதியை சேர்ந்தவர் ராஜேஷ். மருத்துவ ஆய்வக தொழில்நுட்பம் சம்பந்தப்பட்ட படிப்பை அவர் படித்துள்ளார். ராஜேஷ் அதே பகுதியை சேர்ந்த செவிலியரான தேன்மொழி என்பவரை ஒன்றரை வருடத்திற்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார்.
இதையும் படிக்க: 2020ஆம் ஆண்டில் மட்டும் பதிவான போக்சோ வழக்குகள் எத்தனை?
திருமணத்திற்கு பிறகு கணவன் - மனைவி இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு இருந்ததாக தெரிகிறது. இந்நிலையில், இருவருக்கும் இடையே ஏற்பட்ட இந்த கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 3 மாதத்திற்கு முன்பு கணவனை பிரிந்து சென்றார் தேன்மொழி. கணவரைப் பிரிந்து வசித்து வந்த தேன்மொழி செவிலியர் பணிக்காக வெளிநாடு சென்றுள்ளார்.
தேன்மொழிக்கு தமிழ் மொழி என்ற சகோதரி ஒருவர் இருக்கிறார். அவர் பூங்குளம் பகுதியில் வசித்து வருகிறார்.
இதையும் படிக்க:எச்.வினோத் - விஜய் சேதுபதி கூட்டணியில் புதிய படம்?
தேன்மொழியின் சகோதரியான தமிழ் மொழி என்பவர் பூங்குளம் பகுதியில் உள்ள அவரது வீட்டிற்கு சென்று கொண்டிருந்தபோது ராஜேஷ் அங்கு வந்துள்ளார். அவர் தனது கையில் மறைத்து வைத்திருந்த திரவியத்தை தமிழ் மொழி மீது ஊற்றி உள்ளார். இதனை சிறிதும் எதிர்பார்க்காத தமிழ் மொழி உடனடியாக என் மீது ஏதோ ஊற்றி விட்டார் என கூச்சலிட்டு கதறி உள்ளார்.
இதனையடுத்து, உடனடியாக அங்கிருந்த கிராம மக்கள் ஒன்று கூடினர். ராஜேஷ் தமிழ் மொழியின் மீது அமிலம் (ACID) ஊற்றி இருக்கலாம் என சந்தேகமடைந்தனர். அதனால், அவர்கள் உடனடியாக தமிழ் மொழியை ஆலங்காயம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். பின்னர், தமிழ் மொழியை பரிசோதித்த மருத்துவர்கள் இது அமிலம் அல்ல எண்ணெய் போன்று திரவியம் என்று தெரிவித்தனர்.
இதனைத் தொடர்ந்து ராஜேஷ் ஆலங்காயம் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டார். அவரிடம் ஆலங்காயம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டதில் திடுக்கிடும் தகவல் அவர்களுக்கு கிடைத்தது. மனைவியை பிரிந்து வாழ்ந்து வந்ததால் மனைவியின் சகோதரியான தமிழ் மொழியை காதல் வலையில் சிக்க வைக்க வசிய மருந்து ஊற்றியதாக அவர் ஒப்புகொண்டார்.
இதையும் படிக்க: நல்ல செய்தி காத்திருக்கிறது இந்த ராசிக்கு: வாரப் பலன்கள்
அதன் பெயரில் ஆலங்காயம் காவல்துறையினர் ராஜேஷ் மீது வழக்குப் பதிவு செய்து திருப்பத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பின்னர் அவரை சிறையில் அடைத்தனர்.
மனைவி வெளிநாட்டுக்கு சென்றதும் அவரது தங்கையை வசியம் செய்ய ராஜேஷ் முயற்சி செய்துள்ளது அந்தப் பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.