அக்னிபத் திட்டத்திற்கு எதிராக வடமாநிலங்களைத் தொடர்ந்து சென்னையிலும் போராட்டம் தொடங்கியுள்ளது.
4 ஆண்டு கால ஒப்பந்த அடிப்படையில் ராணுவத்தில் ஆள்சேர்க்கும் ‘அக்னிபத்’ என்ற திட்டத்தை மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் கடந்த செவ்வாய்க்கிழமை அறிமுகப்படுத்தினார். 4 ஆண்டுகளுக்குப் பிறகு 25% பேர் வரையில் மட்டுமே பணியில் நிரந்தரமாக்கப்படுவார்கள் என்பதால் நாடு முழுவதும் ராணுவத்தில் சேரத் தயாராகும் இளைஞர்கள் பலர் இதற்கு எதிராகப் போராட்டம் நடத்தி வருகின்றனர். மேலும் எதிர்க் கட்சித் தலைவர்கள் பலரும் இத்திட்டத்தை திரும்பப் பெற வேண்டும் என்று வலியறுத்தி வருகின்றனர்.
வடமாநிலங்களைத் தொடர்ந்து சென்னையிலும் இன்று போராட்டம் வெடிக்கத் தொடங்கியுள்ளது.
சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள போர் நினைவுச்சின்னம் அருகே ராணுவத்தில் சேரத் தயாராகும் பயிற்சி மாணவர்கள் 200-க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
உடற்தகுதி, மருத்துவப் பரிசோதனை அனைத்தும் முடிந்து தற்போது பயிற்சியில் சேரத் தயாராகும் நிலையில் மத்திய அரசு இதுபோன்ற ஒரு திட்டத்தை கொண்டுவந்துள்ளது.
மத்திய அரசு, இத்திட்டத்தை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும், தமிழக அரசு அதற்கு வலியுறுத்த வேண்டும் என்று கோரி அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.