பதற்றப்பட வேண்டிய அளவில் எனக்கு எதுவும் இல்லை; லேசான காய்ச்சல் மட்டுமே என்று முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் விளக்கமளித்துள்ளார்.
இதுகுறித்து கட்சித் தொண்டர்களுக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், தொடர்ச்சியான பணிகள் – தட்பவெப்ப மாற்றம் ஆகியவற்றால் உங்களில் ஒருவனான எனக்கு இலேசான காய்ச்சல் ஏற்பட்டதன் காரணமாக, இன்று (20-6-2022) ராணிப்பேட்டை மாவட்டத்திலும், நாளை (21-6-2022) திருப்பத்தூர், வேலூர் மாவட்டங்களிலும் பங்கேற்க வேண்டிய நிகழ்ச்சிகள் ஒத்திவைக்கப்பட்டிருக்கின்றன. இதுபற்றிய முறைப்படியான அறிவிப்பு அரசின் செய்திக் குறிப்பாக வெளியிடப்பட்டது.
அத்துடன், நேற்று (19-6-2022) வி.பி.ராமன் பற்றிய நூல் வெளியீட்டு விழாவில் நான் பங்கேற்க இயலாத நிலையில், என்னுடைய உரையினை நமது கட்சிப் பொதுச் செயலாளர் - நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் படித்தார்கள். இவை செய்திகளாக வெளியானதும், உங்களில் ஒருவனான என் மீது அன்புகொண்ட தொண்டர்களும், தோழமை இயக்கத்தினரும், அரசியல் பிரமுகர்களும், பல துறைகளைச் சேர்ந்தவர்களும் பதற்றத்துடன் உடல்நலன் குறித்து விசாரிக்கத் தொடங்கிவிட்டார்கள்.
என் மீதான அவர்களின் அன்புதான் அந்தப் பதற்றத்திற்கான காரணம் என்பதை அறிவேன். எனினும், பதற்றப்பட வேண்டிய அளவில் எதுவும் இல்லை. இலேசான காய்ச்சல் என்பதால் மருத்துவர்கள் அறிவுரைப்படி அதற்குரிய மருந்துகளுடன், கொஞ்சம் ஓய்வும் எடுக்க வேண்டியதாகிவிட்டது. இன்றும் நாளையும் சற்று ஓய்வெடுக்கும் வாய்ப்பு அமைந்தால் அதன்பின் எப்போதும் போல பணியினைத் தொடர்ந்திட முடியும். நலமாகவே இருக்கிறேன்.
பணிகளைத் தொடர்ந்திடுவேன். சரியாகச் சொல்வதென்றால், ஓய்விலும் அத்தியாவசியப் பணிகளை மேற்கொண்டுதான் வருகிறேன். சாதாரண செய்திகள்கூட ஊடக உலகில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தி விடுவது இயற்கை. இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.