அதிமுகவில் ஒற்றைத் தலைமை விவகாரம் நாளுக்கு நாள் பூதாகரமாகியுள்ள நிலையில், ஓ.பன்னீர் செல்வம் ஆதரவாளர்கள் எடப்பாடி பழனிசாமி அணிக்கு மாறி வருகின்றனர்.
ஒருங்கிணைப்பாளா், இணை ஒருங்கிணைப்பாளா் பதவிகளுக்கு மாற்றாக பொதுச் செயலாளா் பொறுப்பை மீண்டும் கொண்டு வர அதிமுகவின் முக்கியத் தலைவா்கள் முயன்று வருகின்றனர்.
இந்தப் பதவிக்கு எடப்பாடி பழனிசாமி தரப்பும், ஓ.பன்னீர்செல்வம் தரப்பும் பல்வேறுகட்டங்களாக தனித்தனியாக ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றனர். வரும் 23ஆம் தேதி அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெறவுள்ளது. இதில் பொதுச்செயலாளரை தேர்வு செய்வது உள்ளிட்ட முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் எனத் தெரிகிறது.
இதனால், பொதுக்குழு கூட்டத்திற்கு முன்பாக எடப்பாடி பழனிசாமி தரப்பும், ஓ.பன்னீர்செல்வம் தரப்பும் தனது ஆதரவாளர்களுடன் தனித்தனியாக ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், நேற்றுவரை ஓ.பன்னீர்செல்வத்திற்கு ஆதரவாக இருந்த நிர்வாகிகள் ஒவ்வொருவராக எடப்பாடி பழனிசாமி அணிக்கு மாறிவருகின்றனர். அதன்படி, நெல்லை அதிமுக மாவட்ட செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். இதேபோன்று சென்னை மாவட்ட மகளிர் அணி இணைச் செயலாளர் ஜெயதேவியும் இபிஎஸ் முகாமுக்கு மாறியுள்ளார்.
அவர்களைத் தொடர்ந்து விருதுநகர் மாவட்ட அதிமுக செயலாளர் ரவிச்சந்திரனும் எடப்பாடி பழனிசாமி அணியில் இணையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன் ஒரு பகுதியாக ரவிச்சந்திரன் இன்று பழனிசாமியை நேரில் சந்தித்து பேசவுள்ளார்.
ஓ.பன்னீர் செல்வத்துக்கு ஆதரவாக 15 மாவட்ட செயலாளர்கள் உள்ளதாக நேற்று வைத்திலிங்கம் தெரிவித்த நிலையில் தற்போது 10ஆக குறைந்துள்ளது. அடுத்தடுத்து அதிமுக நிர்வாகிகள் அணி மாறிவருவதால் பன்னீர்செல்வம் தரப்பினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.