அதிமுக பொதுக்குழு கூட்டம் நாளை நடக்கவுள்ள நிலையில், கட்சியின் வரவு செலவு கணக்கு விவரங்கள் ஓ.பன்னீர்செல்வத்திடம் ஒப்படைக்கப்பட்டது.
அதிமுக ஒருங்கிணைப்பாளரான ஓ.பன்னீர்செல்வம் கட்சியின் பொருளாளராகவும் கூடுதல் பொறுப்பு வகித்து வருகிறார். ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் பொதுக்குழுவின்போதும் கட்சி வரவு செலவு விவரங்களை உறுப்பினர்கள் முன்பு பொருளாளர் வாசிப்பது வழக்கமாக உள்ளது.
கடந்த ஆண்டு ஜனவரி 9ஆம் தேதி அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து நாளை பொதுக்குழு கூட்டம் நடைபெறவுள்ளது. இந்த கூட்டத்தில் இந்த ஆண்டு முழுவதும் அதிமுகவில் நடைபெற்ற வரவு செலவு கணக்குகளை ஓ.பி.எஸ். வாசிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக அதிமுக வரவு செலவு கணக்குகள் ஓ.பி.எஸ். தரப்பிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
ஆனால், நாளை நடைபெறவுள்ள அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் ஓ.பன்னீர்செல்வம் பங்கேற்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஏனெனில் ஆரம்பம் முதலே ஒற்றைத்தலைமை விவகாரத்திற்கு எதிரான நிலைப்பாடாகவே ஓபிஎஸ் தரப்பின் நிலை உள்ளது.
மேலும், பொதுக்குழுவில் ஒற்றைத் தலைமை தேர்வு உள்ளிட்ட முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என அதிமுக மூத்த தலைவர்கள் தெரிவித்திருந்த நிலையில், கூட்டதை நடத்தக்கூடாது என ஓபிஎஸ் தரப்பிலிருந்து தொடர்ந்து வலியுறுத்தப்பட்டது.
அதிமுக பொதுக்குழு கூட்டத்துக்கு அனுமதி தரக்கூடாது எனவும், பாதுகாப்பு வழங்கக்கூடாது எனவும், ஓபிஎஸ் தரப்பிலிருந்து ஆவடி காவல் ஆணையரகத்திற்கு மனு மூலம் கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது.
எனினும், ஆனால், உள் அரங்கில் கூட்டம் நடப்பதால், பொதுக்குழு கூட்டம் நடத்தும் விவகாரத்தில் தலையிட முடியாது என ஆவடி காவல் ஆணையரகம் விளக்கம் அளித்து, ஓபிஎஸ் தரப்பு மனுவை நிராகரித்தது.
பொதுக்குழு கூட்டத்தில் ஓபிஎஸ் பங்கேற்பாரா?
பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்பது தொடர்பாக ஓ.பன்னீர்செல்வம் தரப்பிலிருந்து எந்தவொரு முடிவும் இதுவரை அறிவிக்கப்படவில்லை.
பொதுக்குழு நடத்துவது தொடர்பாக நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு நிலுவையிலுள்ளதால், நீதிமன்ற உத்தரவுக்கு பிறகே பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்பது தொடர்பாக முடிவு செய்யப்படலாம்.
அதிமுக ஒருங்கிணைப்பாளராகவும், பொருளாளராகவும் உள்ள ஓபிஎஸ் பொதுக்குழு கூட்டத்தில் கலந்துகொள்ளாதபட்சத்தில், பொருளாளர் பொறுப்பில் ஓபிஎஸுக்கு அடுத்த நிலையில், உள்ளவர் கட்சியின் வரவு செலவு கணக்குகளை வாசிப்பார் எனவும் தெரிகிறது.