சென்னை மாநகராட்சி மேயராக திமுக வேட்பாளர் ஆர். பிரியா(28) போட்டியின்றித் தேர்வாகியுள்ளார்.
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் பிப்ரவரி 19ஆம் தேதி நடைபெற்றது. இதைத் தொடர்ந்து பிப்ரவரி 22 ஆம் தேதி நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையில், திமுக கூட்டணியானது அதிகளவிலான இடங்களில் வெற்றி பெற்றது.
மொத்தமுள்ள 21 மாநகராட்சிகளுக்கான மேயர் பதவியில் கும்பகோணம் மாநகராட்சி காங்கிரஸுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மீதமுள்ள 20 மாநகராட்சிகளுக்கான மேயர் பதவிகளை திமுக நேற்று வெளியிட்டது.
அதன்படி, தமிழகத்தில் மாநகராட்சி மேயர், துணை மேயர், நகர்மன்றத் தலைவர், பேரூராட்சித் தலைவர், துணைத் தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான மறைமுகத் தேர்தல் இன்று நடைபெறுகிறது.
சென்னை மாநகராட்சியைப் பொருத்தவரையில் திமுக மேயர் வேட்பாளராக ஆர்.பிரியா அறிவிக்கப்பட்டு இருந்தார். அவர் இன்று சென்னை மாநகர ஆணையர் ககன்தீப் சிங் பேடியிடம் வேட்புமனுவை தாக்கல் செய்தார். அவரை எதிர்த்து யாரும் போட்டியிடாததால் சென்னை மேயராக ஆர். பிரியா ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இதையடுத்து அவருக்கு சென்னை மாநகர ஆணையர் ககன்தீப் சிங் பேடி பதவிப்பிரமாணம் செய்துவைத்தார். இதையடுத்து பிரியாவுக்கு ஆணையர் வாழ்த்துத் தெரிவித்து மேயருக்கான அங்கியையும் வழங்கினார்.
மிகவும் இளம்வயது மேயர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார் திமுகவின் ஆர்.பிரியா. மேலும் சென்னையின் முதல் பட்டியலின பெண் மேயரும் இவரே.