திமுக நாடாளுமன்ற உறுப்பினர் என்.ஆர். இளங்கோவின் மகன் சாலை விபத்தில் பலியான சம்பவத்துக்கு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
மூத்த வழக்குரைஞரும், திமுகவைச் சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினருமான என்.ஆர்.இளங்கோ அவர்களின் மகன் ராகேஷ் சாலை விபத்தில் உயிரிழந்தார் என்ற துயரச்செய்தி கேட்டு - மிகுந்த வேதனைக்கும் - சொல்லொணாத் துயரத்திற்கும் உள்ளானேன். ராகேஷ் மறைவிற்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
கட்சியின் குடும்பத்தில் ஒருவராக இருந்து பல்வேறு வழக்குகளில் கட்சிக்காக வாதிட்டு வரும் என்.ஆர்.இளங்கோ அவர்களது சகோதரர் சமீபத்தில் மறைந்த நிலையில், அவரது மகனும் சாலை விபத்தில் உயிரிழந்துள்ளார். என்.ஆர்.இளங்கோ அவர்கள் எத்தகைய வேதனைக்கு ஆளாகியிருப்பார் என்று நினைத்துப் பார்க்கவே உடலும் உள்ளமும் அஞ்சி நடுங்குகிறது.
இதையும் படிக்க.. திமுக மாநிலங்களவை உறுப்பினர் என்.ஆர். இளங்கோவின் மகன் விபத்தில் பலி
அன்புக்குரிய மகனை இழந்து வாடும் என்.ஆர். இளங்கோவிற்கும் அவரது குடும்பத்தினருக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.