ஆசிரியர் காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் தனது முகநூலில், அரசு பள்ளிகளில் அதிகரித்துள்ள மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப, புதிய காலி பணியிடங்களை உருவாக்க வேண்டும்.
இட ஒதுக்கீடு முறையை சரியாக பின்பற்றி, டெட் மதிப்பெண்கள் மற்றும் பணி மூப்பு அடிப்படையில் ஆசிரியர்களுக்கான காலி பணியிடங்களை உடனடியாக நிரப்ப தமிழக அரசு முன் வர வேண்டும். மேலும் 2017 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற சிறப்பு ஆசிரியர்களுக்கான, ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களின் சரியான எண்ணிக்கையை வெளியிட வேண்டும்.
தற்போது தேர்வு எழுதுவதற்கான வயது உச்சவரம்பு 50 லிருந்து 58 ஆக அதிகரிக்க வேண்டும். மேலும், ஓய்வு பெறும் வயது 60 லிருந்து 58 ஆக குறைக்க வேண்டும் என்ற ஆசிரியர்களின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்ற தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கடந்த ஆட்சியில் கொண்டுவரப்பட்ட ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்கள் நியமன தேர்வு என்ற அரசாணை 149 ஐ நீக்கம் செய்துவிட்டு, 2021 சட்டமன்ற தேர்தலில் திமுக தேர்தல் அறிக்கையில் கூறியுள்ள 117வது வாக்குறுதியை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.