பேரறிவாளன் விடுதலைக்காக குரல் கொடுத்த மனிதநேயம் உள்ள அனைவருக்கும் நன்றி என பேரறிவாளனின் தந்தை குயில்தாசன் தெரிவித்துள்ளார்.
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் இருந்து பேரறிவாளனை விடுதலை செய்து உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியுள்ளது.
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக சிறைத்தண்டனை பெற்று வந்த பேரறிவாளனை விடுதலை செய்வது தொடர்பான வழக்கில் விசாரணை முடிவடைந்த நிலையில், தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், இந்த வழக்கில் நீதிபதி எல்.நாகேஸ்வர ராவ் தலைமையிலான பி.ஆர்.கவாய், ஏ.எஸ்.போபண்ணா ஆகியோர் அடங்கிய அமா்வு இன்று தீர்ப்பளித்துள்ளது.
அதன்படி, 161-வது பிரிவில் முடிவெடுக்க ஆளுநர் தாமதப்படுத்தியதால், அரசியல் சாசன சட்டத்தின் 142ஐ பயன்படுத்தி உச்சநீதிமன்றமே பேரறிவாளனை விடுதலை செய்வதாக தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இதையடுத்து பேரறிவாளனின் தந்தை குயில்தாசன், 'பேரறிவாளனை விடுவித்தது மகிழ்ச்சி அளிக்கிறது. அவரது விடுதலைக்காக குரல் கொடுத்த மனிதநேயம் உள்ள அனைவருக்கும் நன்றி' என நெகிழ்ச்சியாகக் கூறியுள்ளார்.
இதையும் படிக்க | பேரறிவாளன் விடுதலை: உச்சநீதிமன்றம் தீர்ப்பு