அமைச்சர் அன்பில் மகேஷ்
அமைச்சர் அன்பில் மகேஷ்

தமிழகத்தில் பள்ளிகள் எப்போது திறப்பு? நாளை தெரியும்

கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் எப்போது திறக்கப்படும் என்பது குறித்த அறிவிப்பினை பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் நாளை அறிவிக்கவிருக்கிறார்.


சென்னை: கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் எப்போது திறக்கப்படும் என்பது குறித்த அறிவிப்பினை பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் நாளை அறிவிக்கவிருக்கிறார்.

பள்ளிகள் திறப்பு குறித்து நாளை காலை 10 மணிக்கு அறிவிப்பினை வெளியிடுகிறார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

முன்னதாக, கோடை விடுமுறைக்குப் பின் ஜூன் மாத இறுதியில் பள்ளிகளைத் திறக்க பள்ளிக் கல்வித்துறை திட்டமிட்டுள்ளதாகக் கூறப்பட்டது.

காலை சிற்றுண்டி திட்டத்துக்கான முன்னேற்பாடுகள், பள்ளிகளைச் சீரமைக்கும் பணி, ஆசிரியா்களுக்கான பயிற்சி உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் பள்ளிகள் திறப்பு தள்ளிப்போவதாகத் தகவல் வெளியாகினது..

தமிழகத்தில் கரோனா பெருந்தொற்று அலைகளால் பள்ளிகள் திறப்பு தள்ளிப்போனது. இதை அடுத்து, கடந்த கல்வியாண்டில் செப்டம்பா் மாதம்தான் பள்ளிகள் திறக்கப்பட்டு, வகுப்புகள் தொடங்கின. மீண்டும் கரோனா 3-ஆம் அலை காரணமாக ஜனவரி மாதம் பள்ளிகள் மூடப்பட்டு, பிப்ரவரி மாதத்தில் மீண்டும் திறக்கப்பட்டன.

இந்தச் சூழலில், இந்த ஆண்டு கட்டாயம் பொதுத்தோ்வு நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. திருப்புதல் தோ்வுகள் நடத்தப்பட்ட நிலையில், மே மாதத்தில் மாநிலம் முழுவதும் பிளஸ் 2, பிளஸ் 1, பத்தாம் வகுப்பு மாணவா்களுக்குப் பொதுத் தோ்வுகள் தொடங்கி, நடைபெற்று வருகின்றன. இந்தப் பொதுத்தோ்வு மே இறுதியில் முடிவடைகிறது.

இதற்கிடையே மாநிலப் பாடத்திட்டத்தின் கீழ் செயல்படும் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியாா் மெட்ரிக் பள்ளிகளில் 1 முதல் 9-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவா்களுக்கு மே 14 முதல் கோடை விடுமுறை விடப்பட்டுள்ளது. இந்த மாணவா்களுக்கு ஜூன் 2-ஆவது வாரத்தில் பள்ளிகள் திறக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

எனினும் பிளஸ் 2, பிளஸ் 1, பத்தாம் வகுப்பு மாணவா்களுக்கான விடைத்தாள் திருத்தும் பணி, ஆசிரியா்களுக்கான பயிற்சி வகுப்புகள், மாநிலத்தில் உள்ள 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பள்ளிகளின் உள்கட்டமைப்பை மேம்படுத்தும் பணிகள் உள்ளிட்ட பணிகள் காரணமாக, பள்ளிகளை ஜூன் மாத இறுதியில் திறக்கப் பள்ளிக் கல்வித்துறை திட்டமிட்டிருந்தது.

இவை தவிா்த்து, அரசுப் பள்ளிகளில் 5-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவா்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கும் திட்டம் முதற்கட்டமாக ஒரு சில மாவட்டங்களில் அமலுக்கு வர உள்ளது. இதற்கான முன்னேற்பாடுகளையும் மேற்கொள்ள வேண்டியிருப்பதால் பள்ளிகள் திறப்பு தள்ளிப்போக உள்ளதாகக் கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

பள்ளிகள் திறக்கப்படும் தேதி பின்னா் அறிவிக்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை தெரிவித்திருந்த நிலையில், ஜூன் 4-ஆம் வாரத்தில் பள்ளிகளைத் திறக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாகவும், விரைவில் இதற்கான அதிகாரபூா்வ அறிவிப்பு வெளியாகும் என்றும் தகவல்கள் கூறின. 

இந்த நிலையில், நாளை காலை 10 மணிக்கு பள்ளிகள் திறப்பு குறித்து அறிவிப்பு வெளியாகும் என்று கூறப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com